சேலம் சாப்ட்வேர் பூங்கா-கருணாநிதி அடிக்கல்
சேலம்:
சேலத்தில் அமையவுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு முதல்வர் கருணாநிதி இன்று அடிக்கல் நாட்டினார்.
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சேலம் வந்த அவருக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் ஆயிரக்கணக்கான திமுகவினர் மிகச் சிறப்பான வரவேற்பளித்தனர்.
பின்னர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க மாநாட்டில் கருணாநிதி கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசுகையில், அரசு ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணம் உயர்த்தி வழங்கப்பட்டது. அதேபோல தற்போது ஓய்வூதியர்களுக்கும் பண்டிகைக்கால முன்பணம் ரூ. 500லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்படுகிறது.
ஓய்வூதியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் இந்த அரசு பரிவுடன் கவனித்து நிறைவேற்றும். ஓய்வின்றி உழைக்கும் எனக்கு ஓய்வு பெற்ற உங்களையெல்லாம் பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது என்றார் கருணாநிதி.
சேலத்தில் அமையவுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா, அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன சிறப்பு மருத்துவமனை, குடிநீர்த் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றுக்கு இன்று கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள அறிவியல் கல்லூரி, மேட்டூர் பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றுக்கும் கருணாநிதி அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து கருணாநிதி ஏற்காடு செல்கிறார். இரவு அங்கு தங்கும் கருணாநிதி அங்கு அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலையை நாளை திறந்து வைக்கிறார். இதன் பின்னர் ஈரோடு செல்கிறார்.
முதல்வரின் வருகையையொட்டி சேலத்தில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் சேலம் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications