'கருணாநிதியை பாமகவினர் புறக்கணிக்க கூடாது'
சென்னை:
சேலத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாமகவினர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும், புறக்கணிக்கக் கூடாது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக, பாமக உறவு முன்பு போல சுமூகமாக இல்லை. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் இரு கட்சியினரும் எதிரும், புதிருமாக உள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி சேலம் வந்துள்ளார். அங்கு இன்று நடைபெறும் அதி நவீன சிறப்பு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
இதற்கான அழைப்பிதழில் பாமகவினர் புறக்கணிக்கப்பட்டுள்ளாக அக்கட்சியினர் குறை கூறியுள்ளனர். எனவே முதல்வர் பங்கேறும் நிகழ்ச்சியில் பாமகவினர் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பார்கள் என தர்மபுரி பாமக எம்.பி. செந்தில் கூறியுள்ளார்.
இந் நிலையில் நேற்று இரவு அவசரம் அவசரமாக பாமக தலைவர் ஜி.கே.மணி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், சேலத்தில் நடக்கும் அரசு விழாவில், பல்வேறு திட்டங்களை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
குறிப்பாக மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்படும் அதி நவீன சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் பாமகவினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று செந்தில் எம்.பி கூறியுள்ளார்.
சேலம் மாவட்ட அரசியல் நிலவரத்தை மனதில் ெகாண்டு இந்த முடிவை அவர் அறிவித்திருக்கிறார்.
எனினும் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால், பாமகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்க்கள், நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் தவறாமல் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். எனவே அவரது அறிவுரைக்கு ஏற்ப பாமகவினர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் மணி.












Click it and Unblock the Notifications