சென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு
சென்னை:
சென்னை அருகே வேலம்மாள் சர்வதேசப் பள்ளியில் பிளஸ்-1 மாணவன் படித்து வந்த மர்மமான முறையில் இறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் அருகேயுள்ள அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது ஒரே மகன் முகமது பிலால் (19). பொன்னேரி அருகில் உள்ள வேலம்மாள் இன்டர்நேஷனல் ரெசிடென்சி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை 7.30 மணிக்கு, பள்ளி நிர்வாகத்தினர், மண்ணடியில் உள்ள சாகுலின் தாத்தா அசேனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிலால் அவனது அறையில் மயங்கிக் கிடந்தான். அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியிலேயே இறந்து விட்டான் என்று கூறினர்.
இதைக் கேட்டுஅதிர்ச்சி அடைந்த அசேன், உறவினர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பிலாலின் சாவில் மர்மம் உள்ளது என்று கூறி பிலாலின் உறவினர்கள் போலீஸாரிடம் வாக்குவாதம் புரிந்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
சாகுல் ஹமீதின் குடும்ப நண்பரான காங்கிரஸ் எம்.பி. ஆருண் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பிலாலின் பெற்றோர் சவுதியில் இருந்து வந்த பிறகே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அதுவரை உடல் அப்போலோ மருத்துவமனையில் வைத்திருக்க போலீசார் அனுமதித்தனர்.












Click it and Unblock the Notifications