ஆசிரியர் கூட்டணியின் பட்டினிப் போராட்டம்
நாகர்கோவில்:
32 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வருகிற 19ம் தேதி பட்டினிப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழக அரசு, தொடக்கப் பள்ளிக் கூடங்களில் ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்து வருகிறது. இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் குறைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
5 ஆசிரியர்கள் பணியாற்றிய பள்ளிக்கூடங்களில் இப்போது 2 பேர் தான் உள்ளனர். வகுப்பு பிரிவினையும் ஏற்படுத்தி 40 மாணவர்கள் இருந்த இடத்தில் 60 மாணவர்கள் படிக்கிறார்கள். இதன் காரணமாக தற்போது தொடக்கப்பள்ளிகளின் நிலைமை கேள்விக் குறியாக உள்ளது. 2 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் மூடும் நிலைக்கு வந்துவிட்டன.
அரசின் தொடக்கப்பள்ளிகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 87 லட்சத்தில் இருந்து 62 லட்சமாக குறைந்து விட்டது. 2001-ல் அதிமுக ஆட்சியில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற கொள்கை அமுல்படுத்தப்படும் என்றனர். ஆனால் அவற்றை கொண்டு வராமல் ஏமாற்றி விட்டனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் 1.30 என்ற ஆசிரியர் விகிதம் அமுல்படுத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். ஆனால் அவற்றை செயல்படுத்தாமல் ஆசிரியர் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆசிரியர் குறைப்பு ஆணையான 325ஐ ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் மாணவர் விகிதம் 1.30 ஆக இருக்க வேண்டும் என்பது உட்பட 32 கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 19ம் தேதி தமிழகம் முழுவதும் 400 இடங்களில் பட்டினி போராட்டம் நடத்துகிறோம். வரும் அக்டோபர் 2ம் தேதி சென்னையில் மறியல் போராட்டம் நடத்துகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications