கோடீஸ்வரரை 'பைத்தியமாக்கி' சொத்துக்களைbr/அபகரிக்க முயற்சி-சிக்கலில் திமுக எம்எல்ஏ
சென்னை:
பெரும் கோடீஸ்வரர் ஒருவரை பைத்தியம் என்று கூறி மருத்துவமனையில் சேர்த்து அவரது சொத்தைப் பறிக்க முயன்ற பெரும் சர்ச்சையில் தாம்பரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா சிக்கியுள்ளார். அந்த கோடீஸ்வரரை உடனடியாக மருத்துவமனையிலிருந்து விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன். 54 வயதாகும் இவர் பெரும் கோடீஸ்வரர். கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். இவரை சில நாட்களுக்கு முன் அவரது உறவினர்கள் மன நல மருத்துவனையில் சேர்த்தனர்.
தீனதயாளனுக்கு மன நலம் பாதித்து விட்டதாக கூறி அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந் நிலையில் தீனதயாளன் வீட்டுக்கு அருகில் வசித்து வருபவரான உமா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில் தீனதயாளன் நல்ல மன நிலையுடன் இருக்கிறார். ஆனால் அவரது சொத்தை அபகரிக்கும் நோக்கில், அவரை பைத்தியம் என்று கூறி மன நல மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி சேர்த்துள்ளனர்.
இதில் தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா, வில்லிவாக்கம் போலீஸார், தீனதயாளின் மைத்துனர் ரவிக்குமார் ஆகியோர் பின்னணியில் உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தீனதயாளன் சுதந்திரமாக நடமாட வகை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் பி.டி.தினகரன், ரகுபதி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் முன்பு தீனதயாளன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.
பின்னர் நீதிபதிகள் கூறுகையில், தீனதயாளன் நல்ல மன நிலையில் இருபபது அவர் பேசுவதிலிருந்தே தெரிகிறது. அவரிடம் எந்தக் குழப்பமும் இல்லை. மிகத் தெளிவாக இருக்கிறார். அவர் மிக மிக நார்மலாக உள்ளார்.
எந்த அடிப்படையில், இவரை மன நலம் பாதித்தவர் என்று கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. இவரை எதற்காக மன நல மருத்துவமனையில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. மன நல மருத்துவமனையும் இவர் சரியாகத்தான் இருக்கிறார் என்று அறிக்கை கொடுத்துள்ளது.
இந்த வழக்கை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. இவருடைய சொத்துக்களைப் பறிப்பதற்காகவே இதுபோல நடந்திருப்பதாக அனுமானிக்க வேண்டியுள்ளது. இதற்குப் பொறுப்பான யாரையும் நாங்கள் சும்மா விடப் போவதில்லை என்று கூறி தீனதயாளனை உடனடியாக மருத்துவமனையிலிருந்து விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஊழல் கண்காணிப்புப் பிரிவு விசாரணைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தாம்பரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மீது பெரும் புகார் எழுந்திருப்பதால் ஆளுங்கட்சி வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications