இரண்டு கட்சியினரும் திருடர்கள்: விஜயகாந்த்
சென்னை:
நான் பொய் சொல்ல மாட்டேன் என்பதை நம்பித்தான் இன்றைக்கு இளைஞர்கள் என் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரம் பேர் தேமுதிக கட்சியில் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது,
அரசியல் கட்சி நடத்துவதற்கு நிறைய தகுதிகள் வேண்டும். அந்தத் தகுதி எனக்கு இருக்கிறதா என்று பலமுறை யோசித்து தான் கட்சியை துவக்கினேன். கட்சியை ஆரம்பிப்பது வெகு சுலபம். ஆனால் அதை தொடர்ந்து நடத்துவது மிகவும் கடினமானது. நான் பெண்களை பற்றி அதிகம் பேசுவதாக கூறுகின்றனர். கட்சி துவங்கியது முதல் எனக்கு பல சோதனைகள் வந்து கொண்டிருக்கின்றன. பெண்கள் தான் எனக்கு அதிகம் ஆறுதல் சொல்கிறார்கள். அதனால்தான் அவர்களை பற்றி நான் உயர்வாக பேசுகிறேன்.
நான் பொய் சொல்ல மாட்டேன் என்பதை நம்பித்தான் இன்று இளைஞர்கள் பலர் என்பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். நான் நினைத்தால் குடிசையில் இயங்கும் கட்சி அலுவலகத்துக்கு வராமல், ஏசி அறையிலேயே இருந்திருக்கமுடியும். என்னை நம்பியுள்ள மக்களுக்காக மழையில் நனையவும், வெயிலில் காயவும் தயாராக இருக்கிறேன்.
திமுக கூட்டணிக் கட்சியினர் மணல் கொள்ளையில் ஆதாரம் இருப்பதாகவும், கல்லூரி சீட் விவகாரத்தில் ஆதாரம் இருப்பதாகவும் கூறுவதோடு நிறுத்திக் கொள்கின்றனர்.
ஜாதி, மத உணர்வில் நம்பிக்கை இல்லாததால் தான் மக்களோடு மக்களாக என்னால் பழக முடிகிறது. மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு அரசு கேபிள் டிவி ஆரம்பிக்கப்படுகிறது. அதில் வரும் விளம்பர வருமானத்தை அரசு எடுத்துக் கொண்டு கேபிள் டிவி இணைப்பை மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும்.
பொழுது போக்கு அம்சம் மக்களுக்குத் தேவை என்பதால், இலவச கலர் டிவி வழங்கப்படுகிறது என சொன்னவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
விருத்தாச்சலம் தொகுதியில், மக்களின் தேவையை பூர்த்தி செய்ய லாரிகள் மூலமாக தண்ணீர் வழங்கப்படுகிறது. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தது தவறு என ஒருவர் வசைபாடி கொண்டிருக்கிறார். பசியின் வலி எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும்.
அதனால் தான் ஏழை, எளிய மக்களுடைய வளர்ச்சிக்கு என்ன செய்யவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சட்டசபை தேர்தல் அறிக்கையை தயாரித்தேன். அதில் உள்ள சில திட்டங்களை மாற்றி அரசு இன்று தங்கள் கண்டுபிடிப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
கடந்த ஏப்ரலில் முடிய வேண்டிய கிண்டி கத்திப்பாரா மேம்பாலப்பணி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. மேம்பாலத்தின் வயது 25 ஆண்டுகள் என்று சொல்வார்கள். ஆனால் அதில் 7 வருடங்கள் பாலம் கட்டுவதிலேயே கழிந்துவிடும் போலிருக்கிறது.
தமிழகத்தை ஆண்டு அனுபவித்த இரண்டு கட்சியினரும் திருடர்கள் என்பதால் அவர்களுடன் கூட்டணி சேர பயமாக இருக்கிறது.
மத்திய அரசை அவர்கள் ஆளாவிட்டாலும், அமைச்சர்களை வைத்துக் கொண்டு கோடிகளை சுருட்டுகின்றனர். இதை தடுக்கத்தான் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications