உதவிக் கரம் நீட்டும் என்.ஆர்.ஐ டாக்டர்கள்
கொல்கத்தா:
20க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்திய டாக்டர்கள் உதவியுடன் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு அருகே அதி நவீன மருத்துவமனை உருவாகிக் கொண்டிருக்கிறது. இங்கு முழுக்க முழுக்க ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த டாக்டர்கள் அனைவரும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் ஆவர்.
மேற்கு வங்க மாநில மக்களுக்கு நல்ல, தரமான சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தில் இந்த மருத்துவமனையை எழுப்பி வருகின்றனர்.
ஹவுராவுக்கு அருகே சஞ்சீபன் என்ற பெயரில் இந்த மருத்துவமனை எழுப்பப்படுகிறது. குழந்தைகள் நலம், இதயவியல், காது மூக்குத் தொண்டை உள்ளிட்ட பிரிவுகளில் இங்கு அதி நவீன சிகிச்சை வசதி செய்யப்படும்.
இதுகுறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் சுபாஷிஸ் மித்ரா கூறுகையில், நாங்கள் 1980களில் மருத்துவம் பயின்றபோது இதுபோன்ற ஒரு மருத்துவ சேவையை அளிக்க வேண்டும் என்று நினைத்தோம். தற்போது அது கைகூடியுள்ளது என்றார்.
மித்ரா, மேற்கு வங்கத்தில் மருத்துவம் பயின்றவர். கடந்த 13 ஆண்டுகளாக அவர் இங்கிலாந்தில் டாக்டராக உள்ளார். தற்போது அயர்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உள்ள மருத்துவமனையில் மூத்த மருத்துவராக இருக்கும் அவர் தனது வேலையைத் துறந்து விட்டு மேற்கு வங்கம் திரும்புகிறார். சஞ்சீபன் மருத்துவமனைக்கு தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், மருத்துவம் என்பது வியாபாரம் அல்ல. அது ஒரு சேவை. ஆனால் தற்போது உள்ள தனியார் மருத்துவமனைகள் அந்த எண்ணத்தில் செயல்படவில்லை. அவை மாற வேண்டும். அப்போதுதான் மருத்துவ வசதி கிடைக்காமல் தவிக்கும் ஏராளமான ஏழை, எளிய மக்களுக்கு விமோச்சனம் கிடைக்கும் என்றார்.
மித்ரா தற்போது சிகிச்சா புரோதி உத்யோக் என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்புதான் சஞ்சீபனை உருவாக்குகிறது.
மருத்துவ சிகிச்சைக்கு வருவோரின் வசதிக்காக தேசிய நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மருத்து இன்சூரன்ஸ் திட்டத்தையும் சஞ்சீபன் செயல்படவுள்ளதாம்.
மருத்துவமனையில் அனைத்து மருந்துகளையும் குறைந்த விலைக்கு கொடுப்பதற்காக குறைந்த கட்டணத்தில் மருந்துகளைத் தயாரிக்கும் லோகாஸ்ட் என்ற நிறுவனத்துடன் மித்ராவின் அறக்கட்டளை ஒப்பந்தம் செய்யவுள்ளது. மேலும், வடோடராவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து குறைந்த செலவில் மருந்துகளை கொள்முதல் செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் 130 படுக்கைகள் கொண்டதாக இந்த மருத்துவமனை இருக்கும். பின்னர் படிப்படியாக 300 படுக்கைகளைக அதிகரிக்கப்படும். பிற மருத்துவமனைகளில் செய்யப்படும் ஆபரேஷன்களுக்கான செலவில் 40 சதவீதமே இங்கு வசூலிக்கப்படும்.
தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவ மையமாக இதை மாற்றுவதே தங்களது நோக்கம் என்றும் மித்ரா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications