'உட்கார்ந்து பேசலாம் 'உம்மா' கூடாது!!'
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரைக்கு ஜோடியாக வருபவர்கள் (கணவன், மனைவியாக இருந்தாலும் கூட) உட்கார்ந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், ஆனால் கட்டிப் பிடித்துக் கொள்வதோ, முத்தமிட்டுக் கொள்வதோ கூடவே கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாடு போட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் 2வது பெரிய கடற்கரை என்ற பெயருடைய மெரீனா கடற்கரை, வர வர காதலர் சங்கமிக்கும் கரையாக மாறி வருகிறது. ஜோடி ஜோடிய வரும் பலர் பொது இடம் என்றும் பாராமல், முத்தமிட்டுக் கொள்வதும், கட்டிப் பிடித்து விளையாடுவதும், ஒருவர் மடியில் ஒருவர் படுத்து நெருக்கமாக முகங்களை வைத்துக் கொண்டு ரொமான்ஸ் செய்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்பெல்லாம் படகு ஓரங்களுக்குப் போய் இந்த விளையாட்டை வைத்துக் கொள்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் படு தைரியமாக எங்கு உட்கார்ந்திருக்கிறார்களோ அங்கேயே தங்களது மன்மத லீலையை அரங்கேற்றுகிறார்கள்.
அதுவும், பகல் நேரங்களில்தான் இந்த காதல் களியாட்டங்கள் படு ஜோராக இருக்கிறது. வெயிலைப் பொருட்படுத்தாமல் இவர்கள் பண்ணும் காதல் கூத்துக்களைப் பார்ப்போருக்கு செமத்தியான இலவசப் படம் பார்க்கும் அனுபவம் கிடைப்பதால் இவர்களை வேடிக்கை பார்க்கவும் ஒரு கூட்டம் கூடுகிறது.
இதில் காமெடி என்னவென்றால் ஜோடியாக வருவோரில் பலர் கள்ளக் காதல் ஜோடிகள் என்ற உண்மைதான். இதனால் கடற்கரைக்கு குடும்பத்தோடு வருவோர், குழந்தைகளுடன் வருவோருக்கு பெரும் அவஸ்தையாக இருக்கிறது. இந்த ஜோடிகளின் கண்ணாபின்னா காமக் களியாட்டங்களைப் பார்க்காமல் தங்களது குழந்தைகளை பீச்சுக்குக் கூட்டிப் போய் விட்டு வருவது பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறைக்கு பல்வேறு புகார்கள் போயின. இதையடுத்து தற்போது சில கட்டுப்பாடுகளை காவல்துறை அறிவித்துள்ளது.
காதல் ஜோடிகள் ஜோடியாக வரலாம், அமர்ந்து பேசலாம். அதேசமயத்தில் முத்தமிட்டுக் கொள்வது, கட்டிப் பிடிப்பது, மடியில் படுப்பது ஆகியவை கூடவே கூடாது. அதேபோல ஒருவரை ஒருவர் பிடித்து விளையாடுவது, மற்றவர் கவனத்தை திசை திருப்பும் வகையில் நடந்து கொள்வதும் கூடவே கூடாது.
இது ஆணும், பெண்ணுமாக வரும் அத்தனை ஜோடிகளுக்கும் பொருந்துமாம். இதுபோன்று எல்லை மீறி நடந்து கொள்ளும் ஜோடிகளை போலீஸார் பிடித்து எச்சரித்து அனுப்புகிறார்கள். இன்னொரு முறை இப்படி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் எச்சரிக்கிறார்கள்.
'கடல்' கரையா, 'காதல்' கரையா என்று யாரும் கேட்டு விடாமல் இருந்தால் சரித்தான்!












Click it and Unblock the Notifications