ராமர் பாலம்-ஜெவிடம் இருந்து ஒதுங்கும் வைகோ
சென்னை:
மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு தமிழகத்துக்கு நன்மை பயக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பதை ஏற்க முடியாது என மதிமக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதன்மூலம் தனது கூட்டணியின் தலைவியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நிலையில் இருந்து வைகோ விலகியுள்ளார்.
சேது சமுத்திரத் திட்டத்தை பாஜகவுடன் இணைந்து தீவிரமாக எதிர்த்து வருகிறார் ஜெயலலிதா. ஆனால், இத் திட்டத்தை மிகத் தீவிரமாக ஆதரித்து அதற்காக பல போராட்டங்களையும் நடத்திய வைகோ இதுவரை இந்த விஷயத்தில் கருத்து கூறாமல் அமைதி காத்தார்.
இந் நிலையில் இன்று பெரியாரின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்த வைகோ பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
நான் எந்த மதத்துக்கும் எதிரானவன் அல்ல. எத்தா மதங்களையும் உணர்வுகளையும் மதிப்பவன்.
சேது சமுத்திரத் திட்டம் அண்ணாவின் கனவு. ஆனால், ஆதாம் பாலம் (ராமர் பாலம்) இடிக்கப்படுவதாகக் கூறி அதைத் தடுக்க பாஜக மற்றும் மதவாத அமைப்புகள் முயல்வதை ஏற்க முடியாது. இதற்காக மத உணர்வுகளைத் தூண்டி விட முயல்வது சரியல்ல.
இத் திட்டத்தை நிறைவேற்ற அண்ணா பாடுபட்டார். ஆனால், முதல்வர் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாய்ப்புகள் வந்தபோது கூட அமைதி காத்தார்.
ஆனால், இத் திட்டத்துக்காக நான் அயராது பாடுபட்டேன் என்றார் வைகோ.
அதிமுக கூட்டணிக்குப் போனதில் இருந்து முக்கிய விவகாரங்களில் ஜெயலலிதாவின் நிலையே தனது நிலை என்ற வகையில் முடிவெடுத்து வந்த வைகோ முதன் முறையாக தனி நிலையை எடுத்துள்ளார்.
இதற்கு ஜெயலலிதாவிடம் இருந்து எப்படி ரியாக்ஷன் இருக்கப் போகிறதோ தெரியவில்லை.












Click it and Unblock the Notifications