மக்களை ஏமாற்றி மின் நிலையமா?-ராமதாஸ்
கடலூர்:
மக்களை ஏமாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து மின்நிலையம் அமைக்க விடமாட்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கடலூரை அடுத்துள்ள தியாகவல்லி ஊராட்சிப் பகுதியில் ரூ. 6,000 கோடி மதிப்பீட்டில் தனியார் அனல் மின் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து கேட்ட பின்னர் அவர்களிடம் பேசியதாவது,
நான் உங்களை அரசியல் கட்சி சார்பாக சந்திக்க வரவில்லை. கடந்த 13ம் தேதி தமிழர் உழவர் பேரியக்கம் என்ற இயக்கத்தை தொடங்கினேன். அந்த இயக்கத்தின் கொள்கை, மண்ணை காப்போம், மக்களை காப்போம் என்பதுதான். அதன் அடிப்படையில் உங்களை சந்திக்க வந்துள்ளோம்.
இங்கே உங்களை யாரும் தூண்டிவிடவில்லை. பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுத்தால் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறேன் என்கிறார்கள்.
நிலங்களை எடுக்கிறார்கள் என்றதும் மின்சாரம் போன்று உங்களுக்கு ஷாக் அடிக்கிறது. வேறு இடத்தில் மின்சாரத்தை தயாரியுங்கள். மக்களின் வாழ்வாதரத்தை அழித்துத்தான் மின்சாரம் தயாரிக்க வேண்டுமா
1894ம் ஆண்டில் வெள்ளையன் போட்ட நில ஆர்ஜித சட்டத்தில் 1974ம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டு வந்து, நிலத்தை ஆர்ஜிதம் செய்கிறேன் என மக்களை ஏமாற்ற முடியுமா, இந்த பிரச்சனை தொடர்பாக கடந்த 7ம் தேதி நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல் நடத்த முயன்றதை நாங்கள் ஆதரிக்கவில்லை. இதற்காக மக்கள் மீது காவல்துறை போட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும்.
இயற்கையாக வாழ்கின்ற இந்த சூழலை கெடுக்கக்கூடாது. இங்கு தொழிற்சாலை வேண்டாம் என்று அனைத்து மக்களும் சொன்னார்கள். அதுதான் மகேசன் தீர்ப்பு. இங்கு தொழிற்சாலை வராது.
உங்கள் நியாயமான கோரிக்கையை முதல்வரிடம் பேசி, மின்நிலையம் அமைவதை தடுப்பேன் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications