'ராமர்': கருணாநிதியுடன் சோனியா ஆலோசனை!
டெல்லி:
ராமர் பாலப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவைத் திரும்பப் பெற்றது தொடர்பாக முதல்வர் கருணாநிதியைத் தொடர்பு கொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். அரசின் நிலையையும் விளக்கினார்.
ராமர் பாலம் தொடர்பான வழக்கில், மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், ராமர் இருந்ததற்கும், ராமர் பாலத்தை அவர்தான் கட்டினார் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பாஜகவினர் பெரும் கொந்தளிப்புடன் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். அத்வானி, நேரில் பிரதமரைச் சந்தித்து தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து பதில் மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது. மேலும், இந்த சர்ச்சைக்குரிய அறிக்கையைத் தயார் செய்த தொல்பொருள்துறை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு முதல்வர் கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மதவாதிகளின் நெருக்குதலுக்கு மத்திய அரசு பணியக் கூடாது, மனுவைத் திரும்பப் பெற்றது தவறு என்று அவர் கூறியிருந்தார்.
இந் நிலையில் முதல்வர் கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மனு வாபஸ் பெறப்பட்டது குறித்து அவர் விளக்கினார். மேலும், இந்த விவகாரத்தில் கருணாநிதியின் ஆலோசனையையும் அவர் பெற்றதாக தெரிகிறது.
மேலும், பிற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடனும் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அம்பிகா சோனி குறித்து தீர்மானிப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடனும் இன்று சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications