நெடுமாறனிடம் நலம் விசாரித்த முத்துலட்சுமி!
சென்னை:
உண்ணாவிரதம் இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை, சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சந்தித்து நலம் விசாரித்தார்.
ஈழத் தமிழர்களுக்கு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அவர்களிடம் சேர்ப்பிக்க மத்திய அரசு அனுமதி வழங்காமல் மெத்தனமாக இருப்பதைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் நெடுமாறன் ஈடுபட்டிருந்தார்.
பின்னர் முதல்வர் கருணாநிதி கொடுத்த உறுதிமொழியின் பேரில், அவரது சார்பில் தூதராக வந்த டாக்டர் ராமதாஸின் கோரிக்கையை ஏற்று தனது போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.
நான்கு நாள் உண்ணாவிரதம் இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நெடுமாறன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை நேற்று மாலை வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சந்தித்து நலம் விசாரித்தார். நெடுமாறனை சந்தித்து விட்டு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஈழத் தமிழர்களுக்காகப் போராடி வரும் நெடுமாறன் அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தேன். அவரது போராட்டம் உன்னதமானது, அது தொடர வேண்டும்.
இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்காவிட்டால் நெடுமாறனுடன் இணைந்து நானும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பேன்.
நானும் எனது பகுதி மக்களிடம் ரூ. 1லட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, மருந்துப் போருட்களை சேகரித்து வைத்துள்ளேன். அவற்றையும், நெடுமாறன் சேகரித்த பொருட்களோடு சேர்த்து இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
எனது கணவர் வாழ்க்கை வரலாறு குறித்து எடுக்கப்படும் டிவி தொடர் குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு முடிந்ததும், நானே எனது கணவரின் வாழ்க்கையைப் படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றார் முத்துலட்சுமி.












Click it and Unblock the Notifications