கருணாநிதி மீது வழக்கு- பிரவீன் தொகாடியா
டெல்லி:
ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறியிருக்கும் முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடருவோம் என்று விஷ்வ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது,
தமிழக முதலமைச்சர் கருணாநிதி ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் 1972ம் வருடம் முதல்வராக இருந்தபோது வெளியிட்ட ராமநாதபுரம் மாவட்ட கெஜட்டில், அவர் எழுதிய முன்னுரையில் ராமர் பாலம் இருந்ததை ஒத்துக் கொண்டுள்ளார்.
ஆனால் ஈரோட்டில் நடந்த விழாவில் ராமர் பாலம் கிடையாது, அதெல்லாம் சதிகாரர்களின் கூற்று என்று கூறியுள்ளார். கெஜட்டில் எழுதியதை அவர் மறுத்ததால் அவர் மீது வழக்கு தொடரப்படும்.
இந்தப் பிரச்சனைக்கு குறிப்பிட்ட மத்திய அமைச்சரை மட்டும் பொறுப்பாக்குவது பெரிய தவறு. மத்தியில் அங்கம் வகிக்கும் முழு அமைச்சரவையும் இதற்கு ஒட்டுமொத்த பொறுப்பு. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் தொகாடியா.
பாஜக மூத்தத் தலைவரான வெங்கையா நாயுடு கூறுகையில்,
ராமர் பாலம் குறித்து நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு மத்திய மந்திரிகள் பரத்வாஜ், டி.ஆர்.பாலு, அம்பிகா சோனி ஆகிய 3 பேரும் தான் முழு பொறுப்பு. எனவே அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
ராமர் பால விவகாரத்தில் சாதாரண அதிகாரிகளை பலிகடா ஆக்கிவிட்டு மந்திரிகள் தப்பிக்கவிடக் கூடாது. மத்திய மந்திரிகள் 3 பேர் பதவி விலக வேண்டும் இல்லையெனில் அவர்களை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
கோடிக்கணக்கான இந்து மக்களின் மனதை புண்படுத்தியதற்காக பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.