'சேது'- கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்
சென்னை:
மதவாத சக்திகளின் நெருக்கடிகளுக்கு அடி பணியாமல் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 24ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
ராமர் பாலத்துக்கு (ஆதாம் பாலம்) சேதம் ஏற்படுவதாகக் கூறி சேது சமுத்திர திட்டத்தை பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும் சிக்கலை தீவிரமாக்கிவிட்டது.
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக தலைவர்கள் வரதராஜன் தலைமையில் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். அப்போது சேது சமுத்திர திட்டத்தை தொய்வின்றி நிறைவேற்றக்கோரி, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று கருணாநிதியிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
முதல்வரும் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டார். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினர்.
அப்போது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அவசியமான சேது சமுத்திர திட்டத்தை முடக்கிட மதவாத சக்திகள் திட்டமிட்டு செயல்படுகின்றன.
இந்த சூழ்நிலையில் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்திட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேது சமுத்திரத் திட்டம் பற்றி பேச 24ம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாரந் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும்.
இதில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
சேதுத் திட்டம் தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் பாஜக அணியினரின் போராட்டங்களுக்கு எதிராக திமுக கூட்டணியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அணுகுமுறை குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.