அம்பேத்கரைப் பற்றி பேசுவாரா விஜயகாந்த் - திருமாவளவன்
சென்னை:
அம்பேத்காரின் கொள்கைகளைப் பற்றி விஜயகாந்தால் 3 நிமிடங்கள் பேச முடியுமா என்று விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கேள்வி கேட்டுள்ளார்.
சென்னையை அடுத்துள்ள அம்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் திருமாவளவன் பேசியதாவது,
விஜயகாந்த் 55 வயதில் தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு அம்பேத்காரைப் பற்றி என்ன தெரியும். டாக்டர் அம்பேத்காரின் கொள்கைகளைப் பற்றி 3 நிமிடங்கள் தொடர்ச்சியாக பேசத் தெரியுமா?
முதலமைச்சர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உட்பட ஒரு சிலரைத் தவிர அம்பேத்காரைப் பற்றி யாருக்கு பேசத் தெரியும். விஜயகாந்தின் கொள்கைகள் நாளுக்கு நாள் மாறுபட்டுக் கொண்டேயிருக்கிறது.
அம்பேத்கார் படத்தை வைத்துக் கொண்டு ஒரு சிலர் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகிறார்கள். இடையில் என்னைப் பற்றியும் அவதூறு பரப்பி வருகிறார்கள் என்றார்.