நெல்லையில் 'சரக்கு' தட்டுப்பாடு; கேரளா செல்லும் 'குடிமகன்கள்'!
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பானங்கள் தட்டுப்பாடு நிலவுவதால் 'குடி மகன்கள்' எல்லை தாண்டி கேரளாவுக்குச் சென்று மது அருந்தி மகிழ்ந்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் மது பான கடைகள் 221 உள்ளன. இக்கடைகளில் நகர்புறத்தில் இருக்கும் கடைகளுக்கு வாரத்திற்கு 750 முதல் ஆயிரம் பெட்டிகளும், நடுந்தர நகரங்களுக்கு 350-400 பெட்டிகளும் விற்பனையாவது வழக்கம்.
ஆனால் கடந்த சில வாரங்களாகவே இக்கடைகளுக்கு சரக்கு அனுப்புவது வெகுவாக குறைந்து 10 முதல் 20 சதவிகிதம் வரையே அனுப்பப்பட்டு வருகிறதாம். மேலும் பார் ஏலம் எடுத்தவர்கள் பகுதிக்கு ஏற்ப தினமும் ரூ.1800 முதல் ரூ.3500 வரை பணம் கட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனராம்.
அதுமட்டுமின்றி கடைகள் காலியாக இருப்பதால் பல பகுதிகளில் பார்கள் அடைக்கப்பட்டு விட்டனவாம். தென்காசி வட்டாரத்திலுள்ள 41 கடைகளில் கடந்த இரு தினங்களாக 'பீரைத்' தவிர வேறு எந்த சரக்கும் கிடைக்கவில்லையாம்.
'மது' இல்லாததால் அவதி அடைந்த பல குடிமகன்கள் ரயில் மூலம் அண்டை மாநிலமான கேரளாவுக்குச் சென்று குறைந்த விலையில் கிடைக்கும் 'சாரயத்தை' தேடிச் சென்று பாட்டில்களை வாங்கி வருகின்றனராம்.