பெங்களூர் தாக்குதல் தொடர்பாக 22 பேர் கைது
பெங்களூர்:
பெங்களூரில் தமிழக பஸ் எரிக்கப்பட்டது, முதல்வர் கருணாநிதியின் மகள் வீட்டின் மீது நடந்த தாக்குதல் ஆகியவை தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூர் நகர கமிஷ்னர் அச்சுத ராவ் தெரிவித்துள்ளார்.
சம்பவங்கள் நடந்த இடங்களை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இரு சம்பவங்களையும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் பஸ் எரிப்பு தொடர்பாக 13 பேரையும், செல்வி வீடு மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 9 பேரையும் பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று விசுவ இந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் மறுத்துள்ளன.
இரு மாநிலங்களுக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மர்ம கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தெரிவித்தார்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் தற்போது பெங்களூர் மற்றும் கர்நாடக எல்லைக்குள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
மேட்டூரில் இருந்து மாதேசுவரன்மலை, மைசூர், கொள்ளேகால் ஆகிய பகுதிகளுக்கு நேற்று பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களும் வழக்கம்போல் சென்று வருகின்றன.












Click it and Unblock the Notifications