திருமணமான பெண்ணிடம் ராகிங்: சட்ட மாணவர்கள் அட்டூழியம்-கார்கள் உடைப்பு!
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் சேர்ந்த திருமணமான பெண்ணிடம் ராகிங் செய்து மாணவர்கள் அட்டகாசம் செய்தனர். இதைத் தட்டிக் கேட்டு கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுக்க வந்த அந்த பெண்ணின் உறவினர்களின் கார்களை அடித்து நொறுக்கி அட்டூழியமும் செய்தனர்.
செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் சமீபத்தில் அழகுவள்ளி என்பவர் முதலாமாண்டு பி.எல்.படிப்பில் சேர்ந்தார். இவருக்குத் திருமணம் ஆகி விட்டது. கணவர் பெயர் இளவரசன். சென்னையைச் சேர்ந்தவர் அழகுவள்ளி. இவரது அண்ணன் பெயர் பழனிவேல்ராஜன். இவர் மூவேந்தர் பாசறை என்ற அமைப்பின் மாநிலச் செயலாளராக இருக்கிறார்.
படிக்க வந்த இடத்தில் அழகுவள்ளியை, 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கேலி செய்து ரகளை செய்து ராகிங் செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அழகுவள்ளி தனது அண்ணனிடம் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து பழனிவேல்ராஜன் கல்லூரி முதல்வரை சந்திக்க தனது உறவினர்கள், அமைப்பினருடன் கார்களில் கல்லூரிக்கு வந்தார்.
கார்களை நிறுத்தி விட்டு கல்லூரி முதல்வரிடம் போய் அவரிடம் புகார் கூறினார் பழனிவேல்ராஜன்.
இந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு திரண்டு 2ம் ஆண்டு மாணவர்கள், கோபமடைந்து, கார்களை அடித்து நொறுக்கினர். இதில் அனைத்துக் கார்களும் சேதமடைந்தன.
இதைப் பார்த்த பழனிவேல்ராஜனுடன் வந்த அவரது அமைப்பினர் கல்லூரி மாணவர்களைத் திருப்பித் தாக்கினர். இதையடுத்து மாணவர்கள், கார்களின் பெட்ரோல் டேங்குகளில் தீவைக்க முயன்றனர் ஆனால் முடியவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போஸார் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் பழனிவேல்ராஜன் மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாணவர்களின் செயல் குறித்து பழனிவேல்ராஜன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதேபோல மாணவர் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் கல்லூரியில் தொடர்ந்து பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.