வீடியோ கான்பரன்சிங் மூலம் டைவர்ஸ்- சென்னை நீதிமன்றம் 'வரலாறு'
சென்னை:
அமெரிக்காவில் வசிக்கும் கணவருக்கும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மனைவிக்கும் வீடியோ கான்பரன்சிங் மூலம் 15 நிமிடத்தில் டைவர்ஸ் வழங்கி தீர்ப்பளித்துள்ளது சென்னை நீதிமன்றம்.
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கணவனும், மனைவியும் நேரில் ஆஜராகமலேயே விவாகரத்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிந்த கணவனும், மனைவியும் சாப்ட்வேர் என்ஜீனியர்கள். இருவருக்கும் வயது 25க்குள்தான். கல்யாணத்திற்குப் பிறகு இருவருக்கும் ஒத்துவரவில்லை. இதையடுத்து பிரிய முடிவு செய்தனர்.
இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தனர். சட்டப்படி இருவருக்கும் ஆறு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
இந்த கால கட்டத்தில் கணவன் அமெரிக்காவுக்கும், மனைவி ஆஸ்திரேலியாவுக்கும் வேலை நிமித்தம் இடம் பெயர்ந்து விட்டனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களால் நேரில் ஆஜராக முடியாது என்றும் தங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜாராவார்கள் என்றும் நீதிமன்றத்திடம் இருவரும் முன் கூட்டியே தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து இருவரின் ரத்த தொடர்புடைய உறவினர்கள் நேரில் வருமாறும் (அடையாளம் காட்டுவதற்காக) நீதிபதி உத்தரவிட்டார். உறவினர்களும் நீதிமன்றம் வந்தனர். அவர்கள், விவாகரத்து கோரிய தம்பதிகளின் அடையாளங்களை உறுதி செய்து பிரமாணப்பத்திரம் கொடுத்தனர். அதன் பின்னர் வீடிேயா கான்பரன்சிங் தொடங்கியது.
கணவன், மனைவி ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அவர்களின் வாக்குமூலங்கள் ஆடியோ மற்றும் வீடிேயாவில் பதிவு செய்யப்பட்டது.
இருவரும் டைவர்ஸ் பெறுவதில் குறியாக இருந்ததால் டைவர்ஸ் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
மொத்தம் 15 நிமிடங்களில் இந்த விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது. இந்த நடைமுறைக்கு மொத்தமே ரூ. 300 மட்டுமே செலவானதாக தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications