விநாயகர் பூஜையில் சல்மான்- இஸ்லாமிய அமைப்பு நடவடிக்கை
லக்னெள:
நடிகர் சல்மான்கான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி லால்பாக் ராஜ்மண்டல் என்ற இடத்தில் பாடகர் சோனு நிகாம் ஏற்பாடு செய்திருந்த விநாயகர் பூஜையில் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு விநாயகருக்கு கற்பூர ஆரத்தி செய்தார்.
மேலும் விநாயகர் ஊர்வலத்தில் பக்தர்களுடன் சேர்ந்து நடிகர் நடனமும் ஆடினார். இந் நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இஸ்லாமியரான சல்மான்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய ரஹா அமைப்பைச் சேர்ந்த மெளலானா ரஸா காதிரி என்பவர் கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து தாருல்-இப்தா-மஜ்சர்-ஏ-இஸ்லாம் என்ற முஸ்லிம் அமைப்பு சல்மானுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி,
உருவ வழிபாட்டை இஸ்லாம் அனுமதிக்காது. எந்த ஒரு முஸ்லிமும் சிலையை வழிபடக்கூடாது என்பது மத கோட்பாடாகும். அவ்வாறு சிலைகளை வழிபடுபவர்கள் மீது இஸ்லாமிய நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம்.
இதனால் நடிகர் சலமான்கான் மீண்டும் கலிமா' (ஒரே இறைவன், அவரது இறை தூதர் நபி பெருமானார் என்ற திருக்குரான் வாசகம்) ஓதிய பிறகே மீண்டும் இஸ்லாமுக்கு திரும்ப முடியும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இது குறித்து சல்மான்கானின் தந்தை சலீம்கான் கூறுகையில், சல்மான் இஸ்லாமிய மதத்துக்கு எதிராக செயல்படவில்லை. இதனால் இந்த நடவடிக்கை தேவையற்றது என்றார்.