கருணாநிதிக்கு இந்து முன்னணி 15 நாள் 'கெடு'!!
சென்னை:
ராமர் குறித்த தனது பேச்சுக்கு இன்னும் 15 நாட்களுக்குள் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டின் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்து முன்னணி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் முருகானந்தம்
வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
கருணாநிதி மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும், அனைத்து மதத்தினருக்கும் முதலமைச்சர் ஆவார். ஆனால் தொடர்ந்து இந்துக்களையும், இந்து மத நம்பிக்கைகளையும், இந்து பழக்க வழக்கங்களையும், இந்து நூல்களையும், இலக்கியங்களையும் இழிவுப்படுத்தி பேசி அவமானப்படுத்தி வருகிறார். ராமாயணமும் ஒரு நாவல் என்று சொல்லி அவர் அவமானப்படுத்தியுள்ளது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இந்திய தண்டனைச் சட்டம் 195ன் பிரிவின் கீழ் எந்த மதத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்தக் கூடாது, அப்படி புண்படுத்தியவர்களுக்கு தண்டனை உண்டு.
ஆனால், முதல்வரே சட்டத்தை மதிக்காமல் தொடர்ந்து இந்துக்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல ராமரே இல்லை, ராமர் வாழ்ந்ததற்கான ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.
கருணாநிதியின் தாத்தாவின் பெயர் என்ன? அவர் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை கருணாநிதியால் காட்ட முடியுமா?
ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கருணாநிதி கேட்கிறாரே. இது ஒரு தகுதியான மனிதர் கேட்கும் கேள்வியா? திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை கட்டியவர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார். இதே போல லட்சக்கணக்கான கோவில்களை கட்டிய கட்டிடக் கலையில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள், எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்கள்.
தனது பேச்சுக்கு இன்னும் 15 நாட்களுக்குள் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அவரது வீட்டின் முன் முற்றுகை போராட்டத்தில் இந்து முன்னணி ஈடுபடும்.
மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு கருணாநிதியே பொறுப்பாவார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் முருகானந்தம்.