திமுக தாக்குதல் - பாஜக கண்டனம்
சென்னை:
பாஜக அலுவலகங்கள் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப் போவதாகவும் அது கூறியுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம் விலாஸ் வேதாந்தி, முதல்வர் கருணாநிதியின் தலைக்கு விலை வைத்து ஃபாத்வா பிறப்பித்ததால் திமுகவினர் வெகுண்டுள்ளனர்.
இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் கடுமையாக தாக்கப்பட்டது. இதில் பாஜக பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், போலீஸாரின் துணையுடன் பெரிய பெரிய கற்களை கொண்டு வந்து எங்களைத் தாக்கியுள்ளனர். கொடிக் கம்பத்தைப் பிடுங்கி எடுத்து தாக்கினர்.
இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த செய்தி மக்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே காலை முதல் அனைத்துத் தொலைக்காட்சி சானல்களையும் தெரியவிடாமல் செய்து விட்டனர்.
ஒரு தேசியக் கட்சியின் அலுவலகத்தை இப்படித் தாக்கியுள்ளனர் என்றால் இதை விட மோசமான சம்பவம் இருக்க முடியாது என்றார் கோபமாக.
பாஜக துணைத் தலைவர் எச்.ராஜா கூறுகையில், பாஜக தலைமைக் கழக அலுவலகத்தை அமைச்சர் பரிதி இளம்வழுதி முன்னிலையில் திமுகவினர் வெறி கொண்டு தாக்கியுள்ளனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது.
இந்த வன்முறையை அறிக்கை மூலம் தூண்டி விட்டவரான அமைச்சர் ஆற்காடு வீராசாமி, போராட்டத்திற்கு முன்னிலை வகித்த பரிதி இளம்வழுதி ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
இது தொடர்பாக ஆளுநர் பர்னாலாவை சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications