என்னை எவனும் அழிக்க முடியாது - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil


சென்னை:

நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்கள் மூச்சில் இருப்பேன், உங்கள் ரத்தத்தில் கலந்திருப்பேன், உங்களது நெஞ்சத் துடிப்பில் கலந்திருப்பேன். எனவே எவனும், என்னை இல்லாதவானாக்கி விட முடியாது, அழித்து விட முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகையில், வி.எச்.பி.யின் சாமியார் பிரிவைச் சேர்ந்த வேதாந்தி விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து விரிவாகப் பேசினார்.

அவர் பேசுகையில், நான் பொறுப்பில் இருந்த காரணத்தால் உங்களுக்காக செய்த உதவிகளுக்காக நீங்கள் செலுத்துகின்ற நன்றிதான் இந்த மாநாட்டின் மூலம் அமைந்திருக்கிறது. உங்களில் பலர் என்னை, இந்த அரசை அறிந்தவர்கள். உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றி உங்கள் உள்ளங்களை மகிழ வைத்திருக்கிறேன்.

அந்த ஈரம் காயாத காரணத்தால் தான் இங்கு வந்து அமர்ந்து கரவொலி எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கண்களிலே காணும் அந்த ஒளி என்னுடைய கவலைகளையெல்லாம் மறக்கச் செய்கிறது. என்னுடைய துன்பங்களை பறக்க வைக்கிறது. என்னுடைய சோகங்களுக்கு முடிவு எழுதிக் கொண்டிருக்கிறது. உங்களை காணும்போது உற்சாகம் பெறுகிறேன். உங்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது.

இந்த மாநாட்டிற்கு கருணாநிதி ஒருவேளை தலையோடு வருவாரா இல்லை தலை இல்லாமல் வருவாரா என்று சந்தேகத்தோடு அமர்ந்திருப்பீர்கள். தலை என்பது தலைக்கு மேல் உள்ள பகுதி மாத்திரம் கிடையாது. தலை என்பது ஒருவருடைய முகவரி. தலையே போனாலும் கருணாநிதியின் முகவரி தமிழ்நாட்டை விட்டு என்றைக்கும் போகாது. தமிழ் இலக்கியத்தை விட்டுப் போகாது.

இலக்கியத்தில், கலைத்துறையில், அரசியல் துறையில் எனது முகவரி இடம் பெற்றிருக்கிறது. பெரியார், அண்ணா, புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் நாட்குறிப்புகளில் எனது முகவரி இருக்கிறது. ஏன் உங்கள் நாட்குறிப்பிலும் எனது முகவரி இருக்கிறது. ஆகவே என்னுடைய முகம் மறைந்து போய்விடும். தலை காணாமல் போய்விடும் என்றும் நம்ப வேண்டாம்.

தமிழ்நாட்டில் இந்த கருணாநிதி ஆற்றியிருக்கிற தொண்டுகளை, நல்கியிருக்கிற தியாகங்களை, எண்ணிப் பார்த்தால் தலையே போய்விட்டாலும் கூட இந்திய தபால் தலையில் இந்த தலை இடம் பெற்றே தீரும்.

ஆகவே தலையை கொய்து வா... என்று சொல்லுகிற நல்ல நண்பர்களை நான் பாராட்டுகிறேன். எனது நாக்கை அறுத்துக்கொண்டு வந்து விட்டால் அவர்களுக்கு தங்கத்தால் பரிசளிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த தலையும், நாக்கும் எவ்வளவு விலை மதிக்கத்தக்கது பாருங்கள்.

இது சாதாரண நாக்கா? அண்ணாவின் தமிழை பேசிய நாக்கு. புரட்சி கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளை உச்சரித்த நாக்கு. சிலப்பதிகாரத்தை, திருக்குறளை படித்த நாக்கு. எனவேதான், இந்த நாக்குக்கும், தலைக்கும் இவ்வளவு விலை.

அதற்கு தங்கமாகத்தான் கொட்டிக் கொடுப்போம் என்று சொல்லுகிற அளவுக்கு ஒருவர் வடக்கிலே பேசியிருக்கிறார் என்றால் அவரை நான் வாழ்த்துகிறேன். அவர் தரித்திர நாராயணராக இருக்க முடியாது. சீமானாகத்தான் இருக்க வேண்டும். அவரை வாழ்த்துகிறேன். முன்கூட்டியே நன்றியினை தெரிவிக்கின்றேன்.

லட்சியத்திற்காக எத்தனை பேர் தங்களுடைய இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். தியாகம் செய்திருக்கிறார்கள். லட்சியத்திற்காக எத்தனை பேர் தூக்குமேடையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ பேர் எரிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மண்ணிலே சாய்ந்த மாவீரர்களுடைய, கணக்கு நமக்கு தெரியாதா. அவர்களுடைய வரலாறு தெரியாதா.

அந்த வரலாற்றையெல்லாம் படித்துத்தான் ஒரு வரலாற்றை உருவாக்குகின்ற இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். எனவே, யாரும் பயப்படத் தேவையில்லை. அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை.

நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களுடன் இருப்பேன். அதை யாரும் மறந்துவிடாதீர்கள். உங்கள் ரத்தத்திலே தான் கலந்து இருப்பேன். உங்கள் நெஞ்ச துடிப்பிலே தான் கலந்திருப்பேன். உங்கள் மூச்சிலேதான் இருப்பேன். என்னை எவனும் இல்லாதவனாக ஆக்கிவிட முடியாது. நான் உங்களுடன் இருக்கிற காரணத்தால் என்னை யாரும் அழித்து விடமுடியாது என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+