திமுக அரசை நீக்கக் கோரி அதிமுக போராட்டம் - ஊட்டியில் ஜெ. தலைமை!
சென்னை:
சேது சமுத்திரத் திட்டம் என்ற பெயரில் ராமல் பாலத்தை இடிக்க தீவிரமாக இருக்கும் திமுக, ராமர் குறித்து அவதூறாகப் பேசி வருவதைக் கண்டித்தும், திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும், வருகிற 26ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஊட்டியில் நடக்கும் போராட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டம் தவறான திசையில் தற்போது போய்க் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று நினைத்தால் ராமர் பாலத்தை இடிக்காமல் நிறைவேற்றலாம் என நான் பலமுறை கூறியுள்ளேன்.
ஆனால் ராமர் பாலத்தை இடித்தே தீருவோம் என்று பிடிவாதமாகச் சாதித்தார்கள். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்போது கருணாநிதி, அது ராமர் கட்டிய பாலமே அல்ல என்று பேசுகிறார்.
ராமர் கட்டிய பாலத்தை கருணாநிதி ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், இந்தப் பாலம் ஒரு புராதணச் சின்னம். நடுக்கடலில் இவ்வளவு தொடர்ச்சியாக இரண்டு நிலப்பரப்புகளுக்கு இடையில் பாலம் ஏற்படக் காரணம் என்ன, இயற்கையாக இது தோன்றியது என்றால், வேறு எங்கும் இவ்வாறு ஏன் தோன்றவில்லை.
17.5 லட்சம் ஆண்டுகளாக எவ்வளவு கடல் சீற்றம் ஏற்பட்டிருக்கும். இவ்வளவையும் தாண்டி அந்தப் பாலம் இன்னும் அழியாமல் உள்ளது. ராமரால் கட்டப்பட்டது என்றாலும், இயற்கையாகத் தோன்றியது என்றாலும், இவ்வளவு தொன்மை வாய்ந்த அந்த அற்புதப் படைப்பை பாதுகாக்க வேண்டியது நமது கடமை அல்லவா.
ஆனால் கருணாநிதியோ ராமரை இழிவுபடுத்திப் பேசுகிறார். இவையெல்லாம் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் பேசுவதோ, எழுதுவதோ இந்திய தண்டனைச் சட்டம் 295-ஏ பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். நாட்டின் சாதாரண குடிமக்களுக்கு இது பொருந்தும். பொதுமக்களைக் கட்டுப்படுத்துகிற இந்த சட்டம், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய மாநில முதல்வருக்கும் இந்த சட்டம் இன்னும் அதிகமாகவே பொருந்தும்.
ஒரு முதல்வருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் தனிப்பட்ட உணர்வுகளை ஒதுக்கி வைத்து விட்டு விருப்பு வெறுப்பின்றி, பாரபட்சமின்றி அனைத்து மக்களையும் மதித்து, சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியது ஒரு மாநில முதல்வரின் தலையாய பொறுப்பும், கடமையும் ஆகும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொள்ளும் கருணாநிதி உடனே பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் மன்மோகன் சிங் திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 26ம் தேதி காலை 10 மணியளவில் அதிமுக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்கள், பிற மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஊட்டியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications