பெண் கொடுமை: 'இந்தியாவுக்கு தெ.ஆ. பெட்டர்'
திருநெல்வேலி:
இந்தியாவை விட தென் ஆப்பிரிக்காவில் பெண்களுக்கு எதிரான கொடுமை குறைவு என்று நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார்
பல்கலைக்கழக துணைவேந்தர் சிந்தியா பாண்டியன் கூறியுள்ளார்.
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை கழக நிலவியல் துறைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக பல்கலை கழக மானிய குழு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கிடு செய்துள்ளது. இப்புதிய கட்டிடம் 10 ஆயிரம் சதுர அடியில் அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் சிந்தியா பாண்டியன் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இப்பணி 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு பெறுகிறது.
பின்னர் சமூகவியல் துறையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சிந்தியா பாண்டியன் பேசுகையில், வெளி நாடுகளில் வாழும் பெண்களுக்கு நம் நாட்டு பெண்களை போன்று வரதட்சனை கொடுமை கிடையாது.
தென் ஆப்பிரிக்கா நாட்டில் படித்த பெண்கள் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதே போன்ற சமுதாய மாற்றத்தை நம் பெண்களும் ஏற்படுத்த வேண்டும். நம் நாட்டில் படித்த பெண்களுக்கு நிறைய திறமை உள்ளது. எனவே பெண்கள் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்த முன் வர வேண்டும் என்றார்.
இக்கருத்தரங்கில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் பிஸ்ராம் ராம் பிலாஸ் என்பவர் கலந்து கொண்டார். இவர் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்தும் அதை தடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் மாணவர்களிடையே கருத்தாய்வு நடத்தினார்.
அவர் பேசும் போது, இந்தியாவில் படித்த பெண்கள் 14 பேர் தென் ஆப்பிரிக்கா சென்று இந்து மத போதர்களாக பணியாற்றுகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் சாதி கொடுமைகள் கிடையாது என்றார் அவர்.