பாஜக தலைவர்கள் இன்று ஆலோசனை ஆளுநரிடம் மனு கொடுக்க முடிவு
சென்னை:
தமிழக பாஜக தலைவர்கள், ஆளுநர் பர்னாலாவை இன்று சந்தித்து தங்களது தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து புகார் மனு கொடுக்கவுள்ளனர்.
வி.எச்.பி. பிரமுகர் ராம் விலாஸ் வேதாந்தி, முதல்வர் கருணாநிதியின் தலைக்கு விலை வைத்து அறிக்கை விட்டதால் கொதிப்படைந்த திமுகவினர் நேற்று பாஜக அலுவலங்களைக் குறி வைத்துத் தாக்கினர்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் கற்களால் தாக்கப்பட்டது. கொடிக் கம்பங்கள் பிடுங்கி எறியப்பட்டன. இந்தத் தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த சில பெண்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் பாஜக தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் இல.கணேசன் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்திற்குப் பின்னர் இல.கணேசன் தலைமையில், பாஜக தலைவர்கள் ஆளுநர் பர்னாலாவை சந்திக்கின்றனர். திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி ஆளுநரிடம் பாஜக தலைவர்கள் கோரிக்கை மனு கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications