தமிழக சிஆர்பிஎப் காவலர் அசாமில் மர்ம சாவு
கன்னியாகுமரி:
அசாமில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை பார்த்து வந்த மனோ சிங் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
பூதப்பாண்டி அருகே ஞாலம் பகுதியை சேர்ந்தவர் மனோ சிங். இவரது மனைவி மாணிக்க செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனோசிங் அசாம் மாநிலம் கவுகாத்தியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணி புரிந்து வந்தார்.
சமீபத்தில் இவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் சிலர் ஞாலம் பகுதிக்கு வந்து மனோ சிங்கை பற்றி விசாரித்து சென்றுள்ளனர்.
இந் நிலையில் மனோசிங் பணியில் இருந்தபோது இறந்து விட்டதாக அவரது குடும்பத்திற்கு திடீரென்று போன் மூலம் தகவல் வந்துள்ளது. இதைக் கேட்ட அவரது மனைவி மற்றும் பெற்றோர் கதறி அழுதனர். மனோ சிங்கின் சாவில் மர்மம் இருப்பதாக அவர்கள் கூறினர்.
அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது. மனோசிங்கிற்கு பதவி உயர்வு கொடுத்ததில் அவருக்கும் அதிகாரிகள் சிலருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விரோதத்தில் தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது மனைவி, பெற்றோர் சந்தேகப்படுகின்றனர். மனோசிங்கின் உடலை பிரேத பரிசோதனை செய்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.