தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் தலைமையில் இன்றும் திமுக ஆர்ப்பாட்டம்
சென்னை:
வி.எச்.பி.யைச் சேர்ந்த சாமியார் ராம் விலாஸ் வேதாந்தி, முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்துப் பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமரை அவமதிக்கும் வகையில் பேசி வரும் முதல்வர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் கொண்டு வருவோருக்கு தங்கம் வழங்கப்படும் என முன்னாள் பாஜக எம்.பியும், வி.எச்.பியைச் சேர்ந்தவருமான சாமியார் வேதாந்தி அயோத்தியில் அறிக்கை மூலம் அறிவித்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாந்தியை மிகக் கடுமையாக விமர்சித்து ஆற்காடு வீராசாமி அறிக்கை விட்டார். இதையடுத்து நேற்று காலை தமிழகம் முழுவதும் பாஜக, இந்து முன்னணி, வி.எச்.பி. ஆகியவற்றின் அலுவலகங்கள் தாக்கப்பட்டன. சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமும் அடித்து நொறுக்கப்பட்டது.
போராட்டம் வன்முறையில் முடிந்ததால், சட்டம் ஒழுங்குக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் வெறும் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்துமாறு திமுக தலைமை தொண்டர்களுக்கு உத்தரவிட்டது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
திருவள்ளூரில் ..
திருவள்ளூரில் உள்ள காமராஜர் சிலை அருகே மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் ..
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பெரும் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.
வேலூரில் ..
வேலூர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார்.
திருவண்ணாமலையில் ..
மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து பெரும் திரளான தொண்டர்கள் பெரியார் சிலை வரை ஊர்வலமாக சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். உணவுத்துறை அமைச்சர் ஏ.வ. வேலு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டியும் இதில் கலந்து கொண்டார்.
ஈரோட்டில் ..
அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா தலைமையில் பாஜக மற்றும் இந்து முன்னணி அலுவலங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை மாவட்ட தி.மு.க சார்பில் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் இன்று காலை 11 மணியளவில் செஞ்சிலுவை சங்கம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தமிழக அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர்.
கோவையில் ..
கோவையில் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் போராட்டம் நடந்தது.
திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரத்தில் ..
அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில் திமுகவினர் ராமநாதபுரம் அரண்மனையை ஊர்வலமாக சுற்றி வந்து போராட்டம் நடத்தினர்.
தேனியில், மாவட்ட திமுக செயலாளர் மூக்கையா தலைமையில் பெரும் திரளான திமுகவினர் திரண்டு, நேரு சிலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரையில் ..
வடக்கு மாசி வீதி, மேலமாசி வீதி சந்திப்பில் பெரும் திரளான திமுகவினர் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுச்சாமி தலைமை தாங்கினார்.
சிவகங்கையில், அமைச்சர் பெரியகருப்பன் தலைமையிலும், கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தலைமையிலும், நெல்லையில் மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையிலும் போராட்டம் நடந்தது.
தூத்துக்குடியில், மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் நடந்த போராட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன், திமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூரில் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளான திமுகவினர் பங்கேற்றனர்.
திருச்சியில் வி.எச்.பி. அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சையில் கருப்புக் கொடியை கையில் பிடித்தபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர் திமுகவினர் ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாஜக கொடிக்கு தீ:
நாகர்கோவிலில் அமைச்சர் சுரேஷ் ராஜன் தலைமையில் பாஜக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாஜக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய திமுகவினர் திடீரென பாஜக கொடிக்கு தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடிக் கம்பம் வெட்டி சாய்ப்பு:
புதுக்கோட்டையில், பாஜக அலுவலகம் மீது திமுகவினர் சிலர் கல்வீசித் தாக்கினர். மேலும் அங்கிருந்த கொடிக் கம்பமும் சாய்க்கப்பட்டது.
மயிலாடுதுறையில் திமுகவினர் போராட்டத்தையடுத்து அப்பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. நாகையில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
சேலத்தில் வேதாந்தியின் கொடும்பாவியை பாடையில் கட்டி தூக்கிச் சென்று ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் முன்பு கீழே போட்டு தீவைத்துக் கொளுத்தினர்.












Click it and Unblock the Notifications