முல்லை பெரியாறு அணையில் கேரள அரசின் நிபுணர் குழு ஆய்வு
குமுளி:
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக கேரள அரசு அனுப்பிய நிபுணர் குழு நேற்று முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழகம், கேரளம் இடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவிப்பதோடு புதிய அணை கட்டும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.
இதனால் கேரள அரசு தரப்பில், அணை மிகவும் பலவீனமாக இருப்பதால் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உடைந்து விடும் அபாயத்தில் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால் அணையை சுற்றியுள்ள 5 மாவட்டங்கள் முழுவதுமாக நீரில் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது என்று தேவையில்லாமல் வதந்தி செய்தியை பரப்பி வருகிறது.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து ஏற்கனவே நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்த கேரள அரசாங்ம், மீண்டும் நேற்று ஒரு குழுவை ஆய்வு செய்ய அனுப்பி வைத்துள்ளது.
அணையை ஆய்வு செய்வதற்காக, ரூர்கி ஐ.ஐ.டி. பேராசிரியர் டி.கே.பால் மற்றும் புனேயை சேர்ந்த டாக்டர் அருண் பப்பட் தலைமையில் ஆய்வு குழுவினர் பெரியாறு அணைப்பகுதிக்கு நேற்று வந்தனர்.
அணையை ஆய்வு செய்தபின்னர் அருண் பப்பட் கூறியதாவது,
பெரியாறு அணையை பார்த்தவுடன் பலமாக உள்ளதா, இல்லையா என்று உடனே சொல்லமுடியாது. மகாராஷ்டிராவில் உள்ள கோங்கனா, பண்டாரா அணைகள் மிகவும் பழமையானதாகும். ஆனால் அவை சிமெண்ட் கான்கிரீட்டால் கட்டப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை சுண்ணாம்பு, கருப்பட்டி கலவையால் கட்டப்பட்டுள்ளது.
அணைப்பகுதியில் கடந்த ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதா என்பதை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்து, அதன் அறிக்கையை கேரள அரசிடம் தாக்கல் செய்வோம். தற்போது முல்லை பெரியாறு அணையின் நிலை குறித்து எதுவும் கூற முடியாது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications