விரைவில் இனி ரயில்களிலும் ஏடிஎம்
பாட்னா:
ரயில்களில் ஏடிஎம் வசதியை ஏற்படுத்த இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
இந்திய ரயில்வேயை நவீனமாக்க பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே துறை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓடும் ரயில்களில் ஏ.டி.எம். வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
பயணிகளின் வசதிக்காக ஓடும் ரயில்களில் ஏடிஎம் மையங்களை ஏற்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. தற்ேபாது டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய பெருநகரங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் விரைவில் 1833 ஏடிஎம் மையங்களை திறக்கவும் ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தற்போது ஓடும் ரயில்களில் ஏடிஎம் சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதுதவிர ரயில் நிலையங்களில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு அருகிலேயே இ-டிக்கெட் முறையை வசதியை ஏற்படுத்தவும் ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
நாட்டின் முன்னணி வங்கிகள், ரயில்களில் ஏடிஎம் மையங்ளை நிறுவும். தனிப் பெட்டியில் இந்த ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும். இதற்கு போதிய பாதுகாப்பும் அளிக்கப்படும். பாதுகாப்பான முறையில் பணப் பரிவர்த்தனை நடைபெறுவதும் உறுதி செய்யப்படும்.
ரயில்வே அமைச்சகத்தின் ஆய்வு, வடிவமைப்பு மற்றும் தர கழகத்தின் (ஆர்.டி.எஸ்.ஓ) யோசனையின்படி இந்த ஓடும் ரயிலில் ஏடிஎம் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டம், குளோபல் பொசிசனிங் முறை மற்றும் குளோபல் மொபைல் கம்யூனிகேஷன் முறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.
இதுதவிர கான்பூர் ஐஐடியுடன் இணைந்து சிம்ரன் என்ற ரயில்வே திட்டம் ஒன்றின் ஆய்வையும் ஆர்.டி.எஸ்.ஓ மேற்கொண்டுள்ளது. ரயில்கள் போகும் திசையைக் கண்காணிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதை முன்கூட்டியே தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.