மும்பை திமுகவினர் மீதான தாக்குதலுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை:
மகாராஷ்டிர மாநிலத்தில் திமுக தொண்டர்களுக்கும், தமிழர்களுக்கும் அம்மாநில அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி, மகாராஷ்டிர அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். அம்மாநில முதல்வருடன் தொலைபேசியில் பேசி இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில், திமுக அலுவலகம் மீது பாஜகவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அலுவலகத்தை சூறையாடிய அவர்கள், திமுகவினரையும் சரமாரியாக தாக்கினர்.
இந்த சம்பவத்திற்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் பேசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மராட்டிய மாநிலத்தில் தாராவி பகுதியில் சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி அதை வலியுறுத்துவதற்காக சியோன் பகுதியில் திமுக சார்பில் கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் கவனித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பாஜகவினராலும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினராலும், திமுக முன்னணியினரான அப்பாதுரை, ராஜேந்திரன், குமணராசன் உள்ளிட்டோர் பெருத்த தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாராவி பகுதியில் உள்ள திமுக அலுவலகமும் அதே கும்பலால் தாக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த முதல்வர் கருணாநிதி, மராட்டிய மாநில முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்குடன் தொலைபேசியில் உடனடியாக தொடர்பு கொண்டு திமுக அலுவலகத்திற்கும், தொண்டர்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும், சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், கேட்டுக் கொண்டார்.
முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று மராட்டிய முதல்வர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications