போலி பாஸ்போர்ட் மோசடி மன்னன் கைது
சென்னை:
சென்னையில் ஏராளமான பேருக்கு போலி பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த இலங்கைத் தமிழரை சென்னை போலீஸார், விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்தனர்.
வவுனியாவைச் சேர்ந்தவர் செல்வரத்னம். இவர் தனது மனைவியுடன் கொளத்தூரில் வசித்து வருகிறார். கடந்த 2005ம் ஆண்டு பலருக்கு போலி பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்ததாக செல்வரத்னம் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை தனது மனைவியுடன் விமான நிலையத்துக்கு செல்வரத்னம் வந்தார். இதுகுறித்து அறிய வந்ததும், விமான நிலைய போலீஸார் விரைந்து வந்து செல்வரத்னத்தைக் கைது செய்தனர்.
போலி பாஸ்போர்ட் விநியோகம் மூலம் கோடிக்கணக்கில் அவர் சம்பாதித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து செல்வரத்னத்திடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.