புதைக்கப்பட்ட வாலிபர் உடல் தோண்டி எடுப்பு
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட வாலிபரின் உடலை போலீஸார் மீட்டு தோண்டி எடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே செபத்தையாபுரத்திலிருந்து கூட்டாம்புலி செல்லும் மெயின் ரோட்டில் திருமலையாபுரம் தேரிக்காட்டு பகுதியில் சிறுவர்கள் மாடு மேய்த்து கொண்டிருந்தனர்.
அப்போது சற்று துரத்தில் நாய்கள் எதையோ இழுக்க முடியாமல் இழுத்து கடித்து குதறி தின்று கொண்டிருந்தன. அருகில் சென்று பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கே ஒரு கால் மட்டும் தெரியும் நிலையில் ஒரு ஆணின் உடல் புதைக்கபட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஊரில் சென்று தகவல் தெரிவித்தனர். உடனே பொது மக்கள் கிராம நிர்வாக அதிகாரி முருகனிடம் சென்று கூறினர். அவர் இது குறித்து சாயர்புரம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு திருவைகுண்டம் டி.எஸ்.பி மணி, ஏரல் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப்-இன்ஸ்பெக்டர் பழனி, சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் அரிகரன், பெருமாள், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அங்குள்ள மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 7 மணியளவில் தூத்துக்குடி எஸ்.பி தீபக் டாமோர், தாசில்தார் வேலுசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதைத் தொடர்ந்து தாசில்தார் வேலுசாமி முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
புதைக்கப்பட்டிருப்பவர் காக்கி நிற பேண்ட் அணிந்துள்ளதால் அவர் அரசு ஊழியராகவோ, அல்லது கார் டிரைவராகவோ இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications