வேதாந்தி மீது கொலை மிரட்டல் வழக்கு: சென்னை போலீஸ் நடவடிக்கை
சென்னை:
முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை போலீஸார், வி.எச்.பி. பிரமுகர் ராம் விலாஸ் வேதாந்தி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் வசிக்கும் தனஞ்செயன் என்கிற புகைப்படக் கலைஞர் மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், கடந்த 21ம் தேதி மாலை நாளிதழ்களில் அயோத்தியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யும், வி.எச்.பி.யைச் சேர்ந்தவருமான ராம் விலாஸ் வேதாந்தி என்பவர் முதல்வர் கருணாநிதியை மிரட்டி பேசியதாக செய்தி வெளியாகியிருந்தது.
அதில், முதல்வர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் வெட்டுபவருக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும் என அவர் பேசியுள்ளதாக செய்திகளில் கூறப்பட்டிருந்தது.
இதைப் படித்து நான் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். வேதாந்தி சொன்ன இந்தத் தகவல், பொதுமக்களிடையே இன மற்றும் மத உணர்வைத் தூண்டி விட்டு பகைமையை உண்டாக்குவதாக அமையும். தமிழகத்தில் அமைதிக்குப் பங்கம் ஏற்படும்.
எனவே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ள வேதாந்தி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரை மத்திய குற்றப் பிரிவுக்கு ஆணையர் அனுப்பி வைத்தார். பின்னர் வேதாந்தி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, பாஜக, இந்து முன்ணனி, வி.எச்.பி. ஆகிய அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர் பாரதி புகார்:
இந் நிலையில் திமுக சட்டப் பிரிவு செயலாளரும், ஆலந்தூர் நகராட்சித் தலைவருமான பாரதி தலைமையிலான திமுக குழுவினர் இன்று மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரனை சந்தித்து புகார் மனுவைக் கொடுத்தனர்.
அதில், முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வேதாந்தி மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications