மதுரையில் பாஜக பிரமுகர் ஸ்கூட்டர் எரிப்பு- ஒயின்ஷாப் மீது பாஜகவினர் தாக்குதல்
சென்னை: மதுரை
முன்னாள் பாஜக எம்.பி. வேதாந்தியின் கொலை மிரட்டல் பேச்சைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று 3வது நாளாக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரையில் பாஜக பிரமுகரின் ஸ்கூட்டர் எரிக்கப்பட்டது. பல இடங்களில் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன
வேதாந்தியின் பேச்சைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதல் நாளன்று நடந்த போராட்டம் பெரும் வன்முறையுடன் கூடியதாக இருந்தது. நேற்று 2வது நாள் போராட்டத்தின்போதும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஎச்.பி அலுலகங்களைத் தாக்குவது, கொடும்பாவி எரிப்பது என இருந்தது.
இந் நிலையில் இன்று 3வது நாளாக ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. மதுரையில் இன்று அதிகாலை பாஜக மண்டல தலைவர் ஏஎம். கவண்டரின் பஜாஜ் ஸ்கூட்டரை திமுகவினர் தீவைத்து எரித்தனர். வீட்டுக்கு முன்பு நின்று கொண்டிருந்த ஸ்கூட்டருக்குத் தீ வைத்து விட்டு திமுகவினர் தப்பினர்.
இதேபோல மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் பாஜக கொடிக் கம்பங்கள் இன்றும் வெட்டிச் சாய்க்கப்பட்டன.
திமுகவை எதிர்த்து கடையடைப்பு:
இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டம் தியாகதுர்கம் பகுதியில் திமுகவினர் நடத்தி வரும் வன்முறை மற்றும் போராட்டத்தை கண்டித்து 500க்கும் மேற்பட்ட கடைகளை மூடி கடை உரிமையாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் என்ற பெயரில் தங்களது. கடைகளை மூடுமாறு திமுகவினர் வற்புறுத்துவதாகவும், மூடாதவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் கடை உரிமையாளர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
ஒயின்ஷாப் மீது பாஜகவினர் தாக்குதல்:
மயிலாடுதுறையில், பாஜகவினர் இன்று அடிதடியில் இறங்கினர். திமுகவினர் தங்களது அலுவலகத்தைத் தாக்கியதைக் கண்டித்து போராட்டத்தில் குதித்த அவர்கள் ஒரு ஒயின் கடையை அடித்து நொறுக்கினர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications