கடன் கேட்டவர் பெயரில் ரூ.1 லட்சம் மோசடி!
உடன்குடி:
சுயதொழில் தொடங்க வங்கி கடனுக்கு விண்ணப்பித்த வாலிபர் பெயரில் ரூ.1 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தை அடுத்த மேலராமசாமியாபுரத்தை சேர்ந்த பால்பாண்டி மகன் ஜாண்சன் சுரேஷ். இவர் கடந்த 2004ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மூலம் ஜெராக்ஸ் மெஷின் வாங்குவதற்காக வங்கி கடன் கேட்டுள்ளார்.
மாவட்ட தொழில் மையத்தின் அனுமதியுடன் திருச்செந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கிக்கு மனு செய்துள்ளார். வங்கி அதிகாரிகள் மதிப்பீட்டு பட்டியல் (கொட்டேசன்) வாங்கி வருமாறு கூறியுள்ளனர்.
அதன் அடிப்படையில் ஜான்சன் சுரேஷ் லெட்சுமிபுரத்தை சேர்ந்த வீரசிங் என்பவரை அணுகியுள்ளார். இவர் திருநெல்வேலியில் பிரண்ட்ஸ் கிராபிக்ஸ் நடத்தி வரும் செல்வம் என்பவரிடம் 99 ஆயிரம் ரூபாய்க்கான மதிப்பீட்டுப் பட்டியல் பெற்று கொடுத்துள்ளார்.
ஆனால் மாதங்கள் சில ஆகியும் ஜான்சன் சுரேஷ்க்கு வங்கி கடன் கிடைக்கவில்லை. இதனால் ஜான்சன் சுரேஷ் வங்கியில் கடன் பெறும் தனது திட்டத்தை கைவிட்டு விட்டார். இந்நிலையில் தனது பெயரில் வங்கியில் 99 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜான்சன் சுரேஷ்க்கு தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஜான்சன் சுரேஷ் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் தன்னை திருசெந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர், மேற்பார்வையாளர், லெட்சுமிபுரம் வீரசிங், திருநெல்வேலி ஜங்சன் பிரண்ட்ஸ் கிராபிக்ஸை சேர்ந்த செல்வம் ஆகியோர் வங்கி கடன் பெற்று தருவதாக கூறி எனது பெயரில் கொட்டேசன் கொடுத்து செல்வத்திறகு 99 ஆயிரத்துக்கு செக் (காசோலை) கொடுத்து என்னை மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
சாத்தான்குளம் நீதிமன்ற உத்தரவின் பேரில் மெஞ்ஞானபுரம் இன்ஸ்பெக்டர் கருணாநிதி திருச்செந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கியின் செயலாளர், மேற்பார்வையாளர், லெட்சுமிபுரம் வீரசிங், திருநெல்வேலி ஜங்சன் பிரண்ட்ஸ் கிராபிக்ஸை சேர்ந்த செல்வம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.