வேளாங்கண்ணியில் சிறுமி கற்பழித்து கொலை-2 பேர் கைது
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே 5ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேளாங்கண்ணி அருகேயுள்ள செருதூர் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி(42). இவரின் மகள் மதிவதனி(10). அப்பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
மீனவரான வேலுசாமியிடம் சென்னையைச் சேர்ந்த தேசப்பன்(32) என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் வேலுச்சாமியின் மகளை கற்பழிக்க முயன்றுள்ளார்.
இது தொடர்பாக செருதூர் கிராம பஞ்சாயத்தார்களால் தண்டிக்கப்பட்டு தற்போது வேறொரு நபரிடம் வேலை பார்த்து வருகிறார் தேசப்பன்.
வேலுச்சாமியால் ஊரார் தன்னை தண்டித்ததால், அவரை பழிவாங்கவேண்டும் என்று கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார் தேசப்பன். இந்நிலையில் நேற்று முன்தினம் மகள் மதிவதினியை தனியே வீட்டில் விட்டுவிட்டு வேலுச்சாமி தனது மனைவியுடன் ஒரு திருமணத்திற்கு வெளியூர் சென்றுள்ளார்.
இதனை அறிந்த தேசப்பன், செருதூரைச் சேர்ந்த ராமலிங்கத்துடன் சேர்ந்து வீட்டில் தனியாக இருந்த வேலுச்சாமியின் மகள் மதிவதனியை தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
அவரை உயிரோடு விட்டால் விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்று நினைத்த தேசப்பனும், ராமலிங்கமும், மதிவதனியை கழுத்தை நெரித்து கொலை செய்து அரைகுறையாக புதைத்து விட்டு தப்பிவிட்டனர்.
ஊர் திரும்பிய வேலுச்சாமி தனது மகள் வீட்டில் இல்லாததை கண்டு பதறி பல இடங்களில் தேடினார். செருதூரில் உள்ள ஒரு கட்டிடத்திற்குள் மதிவதனி கொலை செய்து புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார் இந்த கற்பழிப்பு சம்பவத்திற்கு காரணமான தேசப்பனையும், ராமலிங்கத்தையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications