வெள்ளை ரவி கூட்டாளி கடத்தல்; தொடையில் துப்பாக்கி சூடு!!
சென்னை:
சென்னை போலீஸாரால் சமீபத்தில் ஓசூர் அருகே சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளி சபியுல்லாவை, போட்டி ரவுடிக் குழுவினர் கடத்தி தொடையில் துப்பாக்கியால் சுட்டதால் அவர் படுகாயமடைந்தார்.
சென்னையைக் கலக்கி வந்த ரவுடி வெள்ளை ரவியை, சமீபத்தில் ஓசூர் அருகே நடந்த என்கவுண்டரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். இவரது நெருங்கிய கூட்டாளி சபியுல்லா.
இவருக்கும் ஜெனீத் என்ற ரவுடிக் கும்பலுக்கும் இடையே கட்டப் பஞ்சாயத்து செய்வது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சபியுல்லாவை, பேசின்பிரிட்ஜ் பகுதியில், ஜெனீத் கும்பல் வழிமறித்து தாக்கியது.
பின்னர் காரில் போட்டுக் கொண்டு அவரைக் கடத்தினர். வழியில் ஜெனீத் கும்பல், சபியுல்லாவை துப்பாக்கியால் சுட்டது. இதில் அவரது தொடையில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து சபியுல்லாவை கீழே போட்டு விட்டு ஜெனீத் கும்பல் தப்பியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த சபியுல்லாவை அந்தப் பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் சபியுல்லாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சபியுல்லாவை கடத்தி துப்பாக்கியால் சுட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications