பந்த்தை எதிர்த்து அதிமுக, ராமசாமி வழக்கு
சென்னை:
திமுக கூட்டணி நடத்தவுள்ள பந்த்தை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக மதுசூதனன் இன்று தாக்கல் செய்த மனுவில், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டபோது அதை சட்டவிரோதம் என்று கூறி அம்மாநில உயர்நீதிமன்றம் தடை செய்தது.
இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த நிலையில் திமுக கூட்டணி சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் சட்டவிரோதம் என்று கூறி தடை செய்ய வேண்டும்.
மீறி திமுக கூட்டணி பந்த் நடத்த முடிவு செய்தால் ரூ. 100 கோடியை பாதுகாப்பு நிதியாக டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
டிராபிக் ராமசாமியும் வழக்கு
அதே போல திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அக்டோபர் 1ம் தேதி நடத்தவுள்ள பந்த்தை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பல்வேறு பொது நல வழக்குகளை தாக்கல் செய்வதில் பிரபலமானவர் டிராபிக் ராமசாமி. இவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்தான் தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற சட்டம் வந்தது.
மேலும் முக்கிய சாலைகளில் ஊர்வலம் நடத்தவும் இவர் தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்தே, முக்கிய சாலைகளில் ஊர்வலங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுக பந்த்தை தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார் ராமசாமி.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், திமுக கூட்டணி அக்டோபர் 1ம் தேதி கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கடையடைப்பினால் தமிழகத்தில் ரூ. 700 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும். மேலும் இந்தக் கடையடைப்பு சட்டவிரோதமானதாகும்.
எனவே இந்த கடையடைப்பு மற்றும் பந்த் போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுவும் நாளை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications