கருணாநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்-ராஜ்நாத் சிங்
சென்னை:
ராமர் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்காக முதல்வர் கருணாநிதி நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர் செய்யத் தவறினால் திமுக அமைச்சர்களை மத்திய அமைச்சரவையிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இன்று சென்னைக்கு வந்தார். திமுகவினரால் தாக்கப்பட்ட தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை அவர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராமர் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களை முதல்வர் கருணாநிதி திரும்பப் பெற வேண்டும். நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதைச் செய்யுமாறு கருணாநிதியை, சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் வலியுறுத்த வேண்டும்.
கருணாநிதி அதைச் செய்யத் தவறினால், மத்திய அமைச்சரவையில் உள்ள திமுக அமைச்சர்களை பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும்.
திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் அறிவித்துள்ள கடையடைப்புப் போராட்டத்தால் பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் அலுவலங்கள், நிர்வாகிகளின் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.
பின்னர் மறைந்த முன்னாள் பாஜக தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் உடலுக்கு ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தச் சென்றார்.
ஜனா. கிருஷ்ணமூர்த்தி உடல் தகனம்:
இந் நிலையில் ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
அவரது உடலுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பொதுச் செயலாளர் அனந்த்குமார், ஆந்திர மாநில பாஜக தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா, முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு, மாநிலத் தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா, திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் எரியூட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications