'பொது இடத்தை மதநோக்கத்திற்காக ஆக்கிரமிப்பது கண்டிக்கத்தக்கது'
மதுரை:
எந்தவொரு மதத்தை தழுவவும், பின்பற்றவும், அதுபற்றி பிரச்சாரம் செய்யவும் அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தாலும், பொது இடங்களைத் தங்கள் விருப்பம் போல் ஆக்ரமித்துக் கொள்வதற்கான உரிமையை அது எவருக்கும் அளிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ஒன்பது இடங்களில் பிள்ளையார் சிலைகளை வைத்து அவற்றை கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்ல இந்து முன்னணியினர் திட்டமிட்டிருந்தனர்.
அதற்கு மாவட்ட காவல் துறை நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்தது. இதை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு, தான் ஒன்றும் அனுமதி கேட்கவில்லை என்றும் காவல் துறைக்கு தகவல் மட்டுமே தெரிவித்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டு உள்ளதை சுட்டிக் காட்டினார். மனுதாரரின் இந்த அணுகுமுறை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
அவருடைய மற்றும் அவர் சார்ந்திருக்கும் அமைப்பின் மனநிலையைத் தான் இது காட்டுகிறது என்று குறிப்பிட்ட நீதிபதி காவல் துறையினரின் உத்தரவு செல்லாது என்ற வாதத்தை நிராகரித்து, தகவல் மட்டுமே சொல்கிறேன் என்ற அணுகுமுறையை மனுதாரர் கொண்டிருக்கும் போது, அவரை அழைத்து தனது தரப்பைக் கூற வாய்ப்பு அளிக்க வேண்டியதில்லை.
அப்பகுதியில் சட்டம், ஒழுங்கு பற்றிய நிலைமையைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் சாயல்குடி காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications