கிரிக்கெட்தான் உசத்தியா?-உண்ணாவிரதத்தில் குதிக்கும் ஹாக்கி வீரர்கள்!!
20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஆகியுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசுகளை கோடி கோடியாக் கொட்டிக் கொடுப்பதையும், ஹாக்கி விளையாட்டை முற்றிலும் புறக்கணித்தும் வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய ஹாக்கி வீரர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஆனால் இது எத்தனை பேருக்குத் தெரியும் என்பதே பெரிய கேள்விக்குறி. அந்த அளவுக்கு இந்திய அரசு ஹாக்கி விளையாட்டுக்கு நல்ல மரியாதை கொடுத்து வருகிறது.
அதேசமயம், எங்கிருந்தோ வந்த கிரிக்கெட் விளையாட்டுக்கு மிகப் பெரும் முக்கியத்துவத்தை நமது நாடு கொடுத்து வருகிறது.
சாதாரண ஒரு போட்டியில் வென்றால் கூட வானத்துக்கும், பூமிக்குமாக குதிப்பது நம் நாட்டில் மிகச் சாதாரண விஷயமாகி விட்டது.
அதிலும் தற்போது 20-20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆகி விட்டதை, ஏதோ, உலகப் போரில் இந்தியா அபார வெற்றி பெற்று, அனைத்து நாடுகளையும் அடித்துக் காலி செய்து விட்டதைப் போன்ற உணர்வை ஊதிவிட்டு வருகின்றனர்.
பல்வேறு மாநில அரசுகள் கிரிக்கெட் வீரர்களுக்கு கோடி கோடியாக பரிசுகளைக் கொட்டிக் கொடுக்கின்றன. கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம், ஒரே ஒவரில் 6 சிக்சர்கள் அடித்த யுவராஜ் சிங்குக்கு ரூ. 1 கோடி பரிசையும், மிக விலை உயர்ந்த காரையும் பரிசாக அளித்துள்ளது.
இது இந்திய ஹாக்கி வீரர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டுக்கு காட்டும் ஆர்வத்தை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் காட்டாதது அவர்களை மிகவும் விரக்தி அடைய வைத்துள்ளது.
இந்த நிலையைக் கண்டித்து ஹாக்கி வீரர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய ஹாக்கி அணியின் பயிற்சியாளரான ஜோக்கிம் கார்வல்ஹோ சென்னையில் கூறுகையில், ஆசிய கோப்பைப் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று சாம்பியன் ஆனது (இப்போட்டி சென்னையில் நடந்தது - இப்போட்டியைக் காண மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் திரண்டு வரலாறு படைத்தனர்)
ஆனால் இந்த வெற்றியைத் தேடிக் கொடுத்த இந்திய வீரர்களை மத்திய அரசும் சரி, சம்பந்தப்பட்ட வீரர்கள் சார்ந்த மாநில அரசுகளும் சரி கண்டு கொள்ளவே இல்லை.
மத்திய அமைச்சர் பிரபுல் படேல் (மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்) மற்றும் ஜார்க்கண்ட், ஹரியாணா, கர்நாடகா, மகாராஷ்டிர ஆகிய மாநில அரசுகள் இப்போது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குப் பரிசுகளை அள்ளி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
ஹாக்கி வீரர்கள் அனாதைகள் போல நடத்தப்படுகிறோம். தேசிய விளையாட்டான ஹாக்கியை ஏன் நமது அரசியல்வாதிகள் இப்படிக் கேவலமாக நடத்துகிறார்கள்?
ஆசிய போட்டியில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் சாம்பியன் ஆகினோம். இதற்காக குடியரசுத் தலைவர் பாராட்டி செய்தி அனுப்பினார். அதை நாங்கள் மதிக்கிறோம்.
அதேசமயம், கிரிக்கெட் என்றால் ஒரு பார்வை, ஹாக்கி என்றால் இன்னொரு பார்வை என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையை எதிர்த்து ஒரு பயிற்சியாளரும், நான்கு வீர்ரகளும் கர்நாடக முதல்வரின் வீட்டு முன்பு தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்.
கர்நாடக அரசு ஹாக்கி வீரர்களை சாதாரண தூசு போல நினைத்து விட்டது. அதேசமயம், கிரிக்கெட் வீர்ரகளுக்கு மட்டும் பரிசுகளை அள்ளி வழங்கியுள்ளது (ராபின் உத்தப்பா மற்றும் பந்து வீச்சது பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத்துக்கு ரொக்கப் பரிசுகளை கர்நாடகம் அறிவித்துள்ளது)
ஆசிய கோப்பையை வென்றதற்காக இந்த நிமிடம் வரை கர்நாடக முதல்வர் வாழ்த்து தெரிவிக்கவே இல்லை என்றார்.
பயிற்சியாளர் ரமேஷ் பரமேஸ்வரன், மேலாளர் ஆர்.கே.ஷெட்டி மற்றும் வீரர்கள் விக்ரம் காந்த், ரகுநாத், சுனில், இக்னேஸ் திர்க்கி ஆகியோர் கர்நாடக முதல்வர் வீடு முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் பயிற்சியாளர் கார்வல்ஹோ அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications