மேலும் பல பெரிய பதவிகள் வரும்-ராகுலுக்கு கருணாநிதி வாழ்த்து
சென்னை:
மேலும் பல பெரிய பதவிகள் உங்களைத் தேடி வரும் என்று காங்கிரஸ் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் கருணாநிதி பேக்ஸ் மூலம் வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு எனது இதயப் பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களை கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்திருப்பது, இளைய தலைமுறைகளுக்கு பொறுப்புகளை வழங்குவதில் காங்கிரஸ் கட்சி எப்போதும் தயாராக இருப்பதையே காட்டுகிறது.
இந்தியாவைப் பண்படுத்துவதிலும், சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டியதிலும் உங்களது குடும்பம் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்த வரலாற்றுப் பின்னணி உங்களை அசைக்க முடியாதபடி நிலை நிறுத்தும்.
நீங்கள் இன்னும் அதிகமாக உழைப்பதற்கு, மேலும் பல பெரிய பதவிகள் வந்தடையும் என்று வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார் கருணாநிதி.
மேலும், ராகுல் காந்திக்குப் பதவி கொடுத்ததன் மூலம் சரியான முடிவெடுத்துள்ளதாக சோனியா காந்தியைப் பாராட்டி அவருக்கும் ஒரு பாராட்டுச் செய்தி அனுப்பியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications