வேதாந்தியை கண்டித்து பாமக தொடர் போராட்டம்
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் தலைக்கு விலை வைத்த வேதாந்தியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப் போவதாக பாமக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டப் பணிகள் வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், மத வெறியைத் தூண்டும் வகையில், முதல்வர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் அறுத்து வருபவர்களுக்கு தங்கம் பரிசளிக்கப்படும் என்று பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மத வெறியைத் தாண்டி சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை தங்கு தடையின்றி விரைவாக நிறைவேற்றி முடிக்க வேண்டி மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
இதை வலியுறுத்தி பாமக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பும், தாசில்தார் அலுவலகங்கள் முன்பும் வருகிற 29 மற்றும் அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.
இப்போராட்டத்தில் பாமக சட்டசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட தென் மாவட்டத் தலைநகரில் ஒரு நாளும், அவரவர் சார்ந்த மாவட்டத்தில் ஒரு நாளும், அவரவர் தொகுதியில் ஒரு நாளும் என 3 நாட்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.