3வது அணி கூட்டம் திடீர் ரத்து
டெல்லி:
கூட்டணியில் பிளவு ஏற்படுவதை பகிரங்கப்படுத்த விரும்பாத 3வது அணித் தலைவர்கள் இன்றைய கூட்டத்தை திடீரென ரத்து செய்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பு உருவானது 3வது அணி என அழைக்கப்படும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி. ஆனால் தேர்தல் நாளன்றே கூட்டணியில் விரிசல் விழுந்து விட்டது.
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட்ட ஜெயலலிதாவின் போக்கால் பெரும் அதிர்ச்சியுற்ற 3வது அணித் தலைவர்கள் இதுதொடர்பாக எந்தவித முடிவையும் எடுக்காமல் அமைதி காத்து வந்தனர்.
இந்த நிலையில் 3வது அணியின் முக்கியக் கூட்டம் இன்று டெல்லியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூடியிருந்தனர்.
இக்கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டாலும் சரி, பங்கேற்காவிட்டாலும் சரி என்ற மனோ நிலையில் இருந்தனர் கூட்டணி தலைவர்கள். மேலும், இக்கூட்டத்தில் உமாபாரதி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட புதிய தலைவர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு ஜெயலலிதாவின் ஒப்புதல் பெறப்படவில்லை. இதனால் அவராகவே கூட்டணியில் இருந்து விலகுவார் அல்லது விலக்கப்படுவார் என்று கருதப்பட்டது.
இந் நிலையில், 3வது அணியின் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா விவகாரத்தில், இன்னும் சில காலம் பொறுத்துப் பார்க்கலாம் என கூட்டணித் தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா வராத நிலையில் இன்றைய கூட்டம் நடந்தால், 3வது அணி உடைந்து விட்டது என்ற பெய்தி பெரிய அளவில் பிரசாரம் செய்யப்படும். அதைத் தவிர்க்கவே கூட்டத்தை ரத்து செய்துள்ளதாக 3வது அணி தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications