சிக்கலாகும் கர்நாடக ஆட்சி மாற்றம்!
டெல்லி:
டெல்லி சென்ற முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, பாஜக தலைவர்களைச் சந்திக்காமேலேய திரும்பியுள்ளார். இதனால், கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் பெரும் சிக்கலைச் சந்திக்கும் எனத் தெரிகிறது.
கர்நாடகத்தில் கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம், பாஜகவின் துணையுடன் ஆட்சி அமைத்துள்ளது. கெளடாவின் மகன் குமாரசாமி முதல்வராக உள்ளார்.
இரு கட்சிகளும் ஆட்சி அமைத்தபோது செய்து கொண்ட ஒப்பந்தப்படி வருகிற அக்டோபர் 3ம் தேதி பாஜகவிடம், குமாரசாமி ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்கப் போவதில்லை என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு அரசியல் சூழ்நிலை படு சூடாக உள்ளது.
இந்த நிலையில் தேவெ கெளடா டெல்லி சென்றிருந்தார். அங்கு அவர் பாஜக தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். அப்போது ஆட்சி மாற்றம் தொடர்பாக ஆலோசிக்கவும் தீர்மானித்திருந்தார்.
ஆனால் பாஜக தலைவர்களைச் சந்திக்காமலேயே கெளடா பெங்களூர் திரும்பி விட்டார். விரைவில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விளக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கெளடாவின் திட்டம் என்ன என்பது குறித்து மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்கள் மெளனம் காக்கின்றனர். இருப்பினும் திட்டமிட்டபடி தங்களிடம் முதல்வர் பொறுப்பை மதச்சார்பற்ற ஜனதாதளம் வழங்கும் என்ற நம்பிக்கையில் பாஜக தலைவர்கள் உள்ளனர்.