தேர்தல் தகராறு கொலை வழக்கு - 6 பேருக்கு ஆயுள்
மதுரை:
மதுரை அருகே தேர்தல் தகராறு காரணமாக நடந்த கொலை வழக்கில் 6 பேருக்கு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மதுரையை அடுத்த கண்ணணேந்தல் ஊராட்சிக்கு கடந்த 1996ம் வருடம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அப்பகுதியை சேர்ந்த வெள்ளிமலை, ஜீவானந்தம் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் இரு தரப்பினருக்கும் பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக ஜீவானந்தத்தின் உறவினர் சசிகுமார் ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் வெள்ளிமலை மீது புகார் கொடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த வெள்ளிமலை தரப்பை சேர்ந்தவர்கள் சசிகுமாரை கொலை செய்துவிட்டனர். அத்துடன் புகாரை வாங்கிய ஊமச்சிகுளம் காவல் நிலையத்தையும் அடித்து நொறுக்கினர்.
இந்த சம்பவத்தில் பழி வாங்கும் விதமாக ஜீவானந்தம் தரப்பினர், வெள்ளிமலை கோஷ்டியை சேர்ந்தவர்களின் வீடுகளை சூறையாடிவிட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த சம்பவத்திற்கு காரணமான வெள்ளிமலை கோஷ்டியை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக நடந்த வந்த இந்த வழக்கில் மதுரை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
கைதான 17 பேரில் 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், 7 பேருக்கு தலா 3 வருடம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு சொல்லப்பட்டதால், மதுரை நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.