பந்த்: படப்பிடிப்புகள் ரத்து - ஆட்டோ, லாரி ஓடாது; வணிகர் சங்கங்களும் ஆதரவு!
சென்னை:
திமுக கூட்டணி சார்பில் அக்டோபர் 1ம் தேதி நடத்தப்படவுள்ள பந்த்தின்போது ஆட்டோக்கள், லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வணிகர் சங்கங்களும் பந்த்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 1ம் தேதி திமுக கூட்டணி சார்பில் பந்த் நடத்தப்படவுள்ளது. இப்போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து 1ம் தேதி திரைப்படப் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராம.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் 100 ஆண்டு கனவுத் திட்டம் சேது சமுத்திரத் திட்டம். ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நலம் பயக்கும் திட்டம்.
தமிழர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு 24 மணி நேரமும் உழைத்து வருபவர் கருணாநிதி. திரையுலகினருக்கு சலுகைகளை வாரி வழங்கி, அழிவில் இருந்த சினிமாவைக் காப்பாற்றியவர். தாயுள்ளத்தோடு அவர் அளித்த சலுகைகளால் திரையுலகம் செழிப்படைந்துள்ளது.
எனவே அக்டோபர் 1ம் தேதி நடைபெறும் முழு அடைப்பில் தயாரிப்பாளர் சங்கமும் பங்கெடுத்துக் கொள்கிறது. அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்புகள் மற்றும் அதுதொடர்பான வேலைகள் நடக்காது என்று கூறியுள்ளார் ராம.நாராயணன்.
இதேபோல பந்த்துக்கு முழு ஆதரவு தருவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனம் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அன்று லாரிகள் ஓடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பந்த்துக்கு முழு ஆதரவு தருவதாக பல்வேறு வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இருப்பினும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இதுவரை போராட்டத்திற்கு ஆதரவு தருவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கமும் பந்த்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் ஆட்டோக்கள் ஓடாது எனவும் பல்வேறு ஆட்டோ சங்கங்கள் அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications