பந்த்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு; வன்முறைக்கு இடமில்லை - தமிழக அரசு
சென்னை:
திமுக கூட்டணி அக்டோபர் 1ம் தேதி நடத்தவுள்ள பந்த் தினத்தின்போது பேருந்துப் போக்குவரத்து வழக்கம் போல நடைபெறும், பேருந்துகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
அக்டோபர் 1ம் தேதியன்று சட்டம் ஒழுங்குக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாத அளவுக்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். எந்தவிதமான வன்முறைச் செயலுக்கும் அனுமதி கிடையாது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொலைபேசி, தொலைத் தொடர்பு, குடிநீர், பால், மின் விநியோகம், தீயணைப்பு, செய்தித்தாள்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்சார நிலையங்கள், முக்கிய அரசு அலுவலகங்கள், தொலைத் தொடர்பு அலுவலகங்கள், பாலங்கள், ரயில்வே பாலங்கள், உயர்நீதிமன்றம், பிற நீதிமன்றங்கள் ஆகியவற்றுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுல்ளது.
பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் போலீஸ் ரோந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய சாலைகள், முக்கிய சந்திப்புகள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படும். வன்முறைச் சம்பவங்கள் நடைபெறும் இடங்களுக்கு உடனடியாக விரைந்து செல்ல வேண்டும் என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக்குக்கு 'பந்த்' கிடையாது!
இதற்கிடையே, 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மங்கத்ராம் சர்மா கூறுகையில்,
டாஸ்மாக் கடைகளின் பணி நேரத்தை குறைத்த பிறகு விற்பனை ஒன்றும் பெரிதாக பாதிக்கவில்லை. மொத்தத்தில் ஒரு சதவீதம் மட்டும் தான் குறைந்துள்ளது.
திமுக கூட்டணி கட்சிகள் விடுத்துள்ள பந்த் அன்று டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 1ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் திறந்திருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த நாளான அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.