இலங்கை ராணுவத்திற்கு ஆளெடுப்பு; இதுவரை 24,000 பேர் சேர்ப்பு!
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் கடுமையாக சண்டையிட்டு வரும் இலங்கை ராணுவம் தற்போது புதிதாக வீரர்களை சேர்ப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த 9 மாதங்களில் மட்டும் புதிதாக 24 ஆயிரம் வீரர்கள் ராணுவத்தில் இணைந்துள்ளனராம்.
இலங்கையில் நீடித்து வரும் இனச் சண்டை சமீப காலமாக உக்கிரத்தை அடைந்துள்ளது. ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து கடும் மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை ராணுவம், புதிதாக வீரர்களைச் சேர்ப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளது. கடந்த 9 மாதங்களில் மட்டும் 24 ஆயிரம் பேர் புதிதாக ராணுவத்தில் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து ராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா செய்தியாளர்களிடம் கூறுகையில், இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வமாக உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 24 ஆயிரம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர் என்றார்.
இந்த மாதத் தொடக்கத்தில் கடற்படையும் அதிக அளவிலான வீரர்களைச் சேர்க்க அறிவிப்பு வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.
இலங்கை ராணுவம் 1949ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அதற்கு ராயல் சிலோன் ராணுவம் என்று பெயர். 1972ம் ஆண்டு இலங்கை குடியரசான பின்னர் ராணுவத்தின் பெயர் இலங்கை ராணுவம் என மாற்றப்பட்டது.
இலங்கை ராணுவத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். 22 பிரிவுகளாக ராணுவம் பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அக்டோபர் மாதம் இலங்கையில் பருவ மழை தொடங்கி விடும் என்பதால் ராணுவத்தால் டாங்குகளை மட்டுமே பயன்படுத்தி புலிகளுடன் மோத முடியும் என்பதால், மழைக் காலத்திற்கு முன்பே முக்கியமான சில பகுதிகளை புலிகளிடமிருந்து கைப்பற்றி விட ராணுவம் மும்முரமாக உள்ளது.
புலிகளின் கடற் தளம் தகர்ப்பு - ராணுவம்
இதற்கிடையே, இலங்கையின் முல்லைத் தீவு பகுதியில் உள்ள விடுதலைப் புலிகள் கடற்படை தளத்தை தகர்த்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.10 மணிக்கு புதுக்குடியிருப்புக்கு வட மேற்கில் உள்ள தேவிபுரம் என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்படை தளத்தின் மீது இலங்கை விமானப்படையின் மிக் 27 ரக விமானமும், கேபிர் ரக விமானமும் குண்டு மழை பொழிந்தன.
இதில் அந்த கடற்படைத் தளம் தகர்க்கப்பட்டதாக இலங்கை பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இருப்பினும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இது உறுதிப்படுத்தப்படவில்லை.
நேற்றுதான் விடுதலைப் புலிகளின் 3 படகுகளை கடற்படை தாக்கி அதில் இருந்த 18 புலிகளைக் கொன்றதாக ராணுவம் கூறியிருந்தது. இந்த நிலையில் இன்று காலை கடற்படைத் தளத்தை தாக்கியதாக இலங்கை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications